கருணாநிதியிடம் நலம் விசாரிக்க காவிரி மருத்துவமனை வந்தார் ராகுல் காந்தி! மழையிலும் குவிந்த தொண்டர்கள்
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்க காவிரி மருத்துவமனை வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆழ்வார்பேட்டையிலுள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி. ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு மீண்ட கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அவர் உடல் நிலை குறித்து விசாரிக்க அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் மருத்துவமனை சென்று கருணாநிதி நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், இன்று மாலை 4.18 மணிக்கு காவிரி மருத்துவமனைக்கு ராகுல் காந்தி வந்தடைந்தார். முன்னதாக 3.30 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்திற்கு பயணிகள் விமானத்தில் வந்திறங்கினார். காங்கிரஸ் மேலிடபொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் அவருடன் வருகை தந்தார்.
விமான நிலையத்தில் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் அவர்களை வரவேற்றனர்.
கடந்த ஆண்டு காவிரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்றபோதும், ராகுல் காந்தி நேரில் வந்து நலம் விசாரித்திருந்தார். கொட்டும மழைக்கு நடுவே காவிரி மருத்துவமனை வெளியே, காங்கிரஸ், திமுக தொண்டர்கள், வாழ்த்து கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள்.