கிருஷ்ணகிரியில் தொடரும் அதிரடி... மீண்டும் ஒரு தனியார் பள்ளியில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
கிருஷ்ணகிரி: வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி ஒன்றில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூரில் தனியார் கிரீன்வெளி சி.பி.எஸ்.இ. மெட்ரிக்குலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நடத்தி வரும் இந்தப் பள்ளியில், வாக்காளர்களுக்கு தருவதற்காக கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நேற்றிரவு வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட வருமான வரிதுறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை 8 மணியளவில் அந்த தனியார் பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
இதையடுத்து பள்ளிக்குள் யாரையும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பள்ளியில் முன்பக்க கிரீல் கதவு மூடப்பட்டது. மேலும் பள்ளிக்கு வெளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. பள்ளியின் ஒவ்வொரு அறைகளிலும் அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நீண்ட நேரமாக சோதனை நடந்து வருவதால் இப்பள்ளியில் கட்டுக்கட்டாக பணம் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியில் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் ரூ. 3 கோடியே 39 லசம் ரூபாய் மற்றும் 245 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் இதில் உரிய ஆவணங்கள் காட்டியது போக மீதமுள்ள ரூ. 2 கோடியே 75 லட்சம் பணத்தை வருமான வரிதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications