கனமழை எதிரொலி: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 7 மாவட்டங்களில், பள்ளிகளோடு சேர்த்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான பல்வேறு தமிழக மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இன்றும், மழை நீடித்து வருகிறது. எனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் வேலுார் ஆகிய 7 மாவட்டங்களிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதேநேரம், குமரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கல்லூரிகள் இயங்கும் எனவும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.