தாம்பரத்தில் தயார் நிலையில் படகுகள்- மீண்டும் வேலையைக் காட்டத் துவங்கிய மழை!
தாம்பரம்: தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கொட்டும் மழையால் மீட்புப் பணிகளுக்காக படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை புறநகர் பகுதிகளில் சமீபத்தில் பெய்த கன மழையில் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளம் பாதித்த இடங்களில் மழைநீர் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மக்கள் திரும்ப தொடங்கி விட்டனர்.
மழைநீரை வெளியேற்ற தாம்பரம் கிஷ்கிந்தா சாலை சமத்துவ பெரியார் நகரில் அடையாறு கால்வாய் 60 மீட்டர் அகலப்படுத்தும் பணிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதால் மழை வெள்ளநீர் தேங்காமல் சென்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் மட்டும் தொடர்ந்து மழைநீர் தேங்கி இருக்கிறது.

மீண்டும் தொடங்கிய மழை:
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று தாம்பரம் பெருங்களத்தூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பலத்த மழை தொடர்ந்தால் இப்பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு படகுகள் தயார் நிலையில் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது

தயார் நிலையில் படகுகள்:
இது தொடர்பாக தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர், "தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருக்கிறோம். தீயணைப்பு துறை படகுகளுடன் 50 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 6 மீன்வளத்துறை படகுகள் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தயாராக உள்ளது.

வெள்ள பாதிப்பு கட்டுப்பாட்டு அறை:
உள்ளாட்சி அமைப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டவர்களை தங்க வைக்கவும் தயாராக உள்ளோம். 24 மணி நேரம் செயல்படும் வெள்ள பாதிப்பு அவசர கட்டுப்பாட்டு அறை தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மிரட்டும் மழை:
ஏற்கனவே வெள்ள பாதிப்பில் வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வீணான நிலையில் தற்போது தான் அவைகளை பொதுமக்கள் பழுது பார்த்து சீரமைத்த நிலையில் தற்போது மீண்டும் மிரட்டும் மழை பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications