கடலூரில் மீண்டும் கனமழை- திரும்பிய பக்கமெல்லாம் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்...
கடலூர்: வடகிழக்குப் பருவமழையின் உக்கிரத்தால் கடலூர் மாவட்டம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளது.
நடப்பாண்டின் வடகிழக்குப் பருவமழை முதலில் தாக்கியது கடலூரைத்தான். கடலூர் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கரையைக் கடந்த போது பெருமழை கொட்டி பேரழிவு ஏற்பட்டது.
தன் பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் தொடர்ந்தும் பருவழை கடலூரை பாடாய் படுத்தி வருகிறது. இதனால் கடலூர் நகரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த மாவட்டமே வெள்ளக்காடாகி இருக்கிறது.
தாழ்வான பகுதிகளில் பல அடி உயரத்துக்கு மழை நீர் வெள்ளமாக தேங்கியிருப்பதால் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது. அரசு நிர்வாகம் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கடல் பயங்கர சீற்றமாக இருப்பதால் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தொடர்ந்து கொட்டி வரும் மழையால் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என காத்திருக்கின்றனர் கடலூர் மாவட்ட மக்கள்.