சென்னையில் கொட்டித் தீர்த்த மழை... விமான நிலையத்திற்குள் புகுந்த வெள்ளநீர்
சென்னை: சென்னையில் இன்று காலையில் சுமார் ஒருமணிநேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதியில் வெள்ளநீர் தேங்கிய நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
தமிழகத்தின் பிப்ரவரி கடைசி வாரம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து பூமியை குளிர்வித்தது.
சென்னையில் வெயில் பட்டையை கிளப்பிய நிலையில் புத்தாண்டு தினமான நேற்று லேசாக சாரல் மழை பெய்து சில்லென்ற காற்று வீசியது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதலே குளுமையான காற்று வீசி வந்த நிலையில் திடீரென மழை கொட்டித்தீர்த்தது.

கொட்டித்தீர்த்த மழை
சென்னையில் மாம்பலம், காசிமேடு, மேடவாக்கம், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. காலையில் பெய்த கனமழையால் அலுவலகம் செல்வோர் அவதிக்கு ஆளாகினர். சாலை ஓரங்களில் தேங்கிய தண்ணீர் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

விமான நிலையத்திற்குள் தண்ணீர்
மீனம்பாக்கம் பகுதியில் கொட்டிய மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.

இடியுடன் மழை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கொடைக்கானலின் முக்கிய நீராதாரமான மனோரத்தினம், சோலை அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

உதகையில் தொடர்மழை
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 4-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 11 ஆம் தேதி முதல் உதகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. உதகையில் நேற்று 24 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

3 நாட்களுக்கு மழை நீடிக்கும்
தென் தீபகற்பத்தின் மேலடுக்கில் மிதமான காற்றுப்போக்கே மழைக்குக் காரணம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பெய்யும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு பிறகும், தென் மாவட்டங்களில் மழை தொடரலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications