வெள்ளத்தில் தவிக்கும் காஞ்சி, திருவள்ளூர்: நதிகளில் கரைபுரண்ட வெள்ளம் - போக்குவரத்து துண்டிப்பு
திருவள்ளூர்: கனமழைக்கு காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரே நாளில் 37 செ.மீ மழையும், காஞ்சியில் ஒரே நாளில் 32 செ.மீ மழையும் கொட்டியுள்ளது. குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கூவம், கொசஸ்தலை, ஆரணி ஆகிய நதிகளில் மழைநீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் கிராமங்கள் மூழ்கியுள்ளன. முக்கிய சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாலம் உடைந்திருப்பது தெரியாமல் தண்ணீரில் வாகனத்தை செலுத்துபவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. உபரி நீர் வெளியேற்றப்படுவதால் குடியிருப்புகள், சாலைகளில் தேங்குகிறது. ஆவடி வீட்டுவசதி வாரிய பகுதி, காந்திநகர், சங்கர் நகர், கொரட்டூர், அம்பத்தூர், திருநின்றவூர்-சுதேசி நகர், மாதவரம் அருகே உள்ள மாத்தூர், பூந்தமல்லி அருகே உள்ள கொப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
செங்குன்றம் மற்றும் மாதவரம் ஜிஎன்டி சாலை, அம்பத்தூர் சிடிஎச் சாலை, புழல், மணலி, பாடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. செங்குன்றம் பஸ் நிலையம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
பிச்சாட்டூர் எரி திறப்பு
பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளின் அருகே உள்ள ஆந்திர பகுதிகளில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள உள்ள அம்மப்பள்ளி தடுப்பணை மற்றும் ஆரணி ஆற்றுக்கு அருகே உள்ள பிச்சாட்டூர் ஏரியை அதிக மழையின் காரணமாக ஆந்திர பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர்.
3 ஆறுகளில் வெள்ளம்
இதனால் கூவம், கொசஸ்தலை, ஆரணி ஆகிய 3 ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதில், கூவம் நதியின் குறுக்கே, திருவள்ளூர் அருகே உள்ள மணவாளநகர் தரைப்பாலம், புதுசத்திரம் தரைப்பாலம், அடையாளம் பட்டுவில் இரு தரைபாலங்கள் நீரில் மூழ்கின. நெற்குன்றம் அருகே உள்ள ரயில் நகர் தரைப்பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன.
தரைப்பாலம் துண்டிப்பு
கொசஸ்தலை ஆற்றில் பெருக் கெடுத்ததால் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நாராயணபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் அடித்து செல்லப் பட்டது. இதனால், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ் சாலையில், திருவள்ளூர்- திருத்தணி மார்க்கத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதே போல், ஆரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் மழை நீரில், ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால், ஊத்துக் கோட்டை- திருவள்ளூர் சாலை யில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது.
கிராமங்கள் துண்டிப்பு
ஆரணி ஆற்றுக்கரையோரத்தில் உள்ள குமரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல குடிசை வீடுகள் நீரில் மூழ்கின. ஆரணி ஆற்றின் குறுக்கே பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் தடுப்பணையின் ஷட்டர் சற்று விலகிய தால், மழைநீர் பெருக் கெடுத்து ஓடுகிறது.
ஆரணி மற்றும் கூவம்
ஆரணி மற்றும் கூவம் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைநீர் சூழ்ந்தது. நாராயணபுரம் தரைப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாலும், ஒதப்பை, ஊத்துக்கோட்டை தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாலும், போக்குவரத்து இரண்டாவது நாளாக துண்டிக்கப்பட்டது.
போக்குவரத்து நிறுத்தம்
திருத்தணி - காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து, நேற்றும் இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டது. திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியத்தில் பல பகுதிகளில் ஏரியில் இருந்து தண்ணீர் சாலையில் செல்வதால் ஆபத்தான முறையில் கிராம வாசிகள் கடந்து செல்கின்றனர். மணவாளநகர் - ஸ்ரீபெரும்புதுார், சத்தரை - கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம் - இருளஞ்சேரி, மப்பேடு - கொண்டஞ்சேரி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
வெள்ளச்சேதம்
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரத்தில், கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு நேற்று காலை உடைந்து சேதமடைந்தது. கொற்றலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், சோழவரம் அடுத்த கொசவன்பாளையம், சின்னமடூர், தாண்டவராயன்பாளையம் ஆகிய கிராமங்களில் கரைகள் உடைப்பு ஏற்பட்டு, மழைநீர் சூழ்ந்தது. கவரைப்பேட்டை ஏ.என்.குப்பம் அணைக்கட்டு அருகே உள்ள ஆர்.என்.கண்டிகை கிராமம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள், வீடுகள் மூழ்கி உள்ளன