24 மணி நேரத்திற்குள் பலத்த மழை கொட்டுமாம் தமிழகத்தில்...!
சென்னை: 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக இந்த மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து வெயில் வெளுத்துக் கொண்டிருக்கிறது. கோடை காலத்தின் பிற்பகுதி போலவே இல்லை. மாறாக, கோடை காலத்தின் உச்சம் போல காட்சி தருகிறது தமிழகம். எங்கு பார்த்தாலும் வெயிலாக உள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை காலை தொடங்கி அடுத்த நாள் காலை வரையிலான 24 மணி நேரத்தில் வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யுமாம்.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்யும் வாயப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் கன மழை
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தி்ல் பரவலாக கனத்த மழை பெய்து வருகிறது. கேரளாவில் 3 நாட்கள் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதையொட்டியுள்ள கன்னியாகுமரியிலும் மழை பெய்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலும் வானம் மேக மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.