குன்னூரில் கனமழை... வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப் பட்டுள்ளது.
வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவது வழக்கம். ஆனால், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்க, கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

குன்னூரில் நேற்று முன் தினம் 11.6 செ.மீ. மழை பதிவானது. கனமழை காரணமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் வீடுகளுக்குள் நீர் புகுந்தது. வெள்ளத்தில் 3 கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. மழை காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
மழை காரணமாக குன்னூர் லாஸ் நீர்வீழ்ச்சி மற்றும் காட்டேரி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த நீர்வீழ்ச்சிகளின் அருகே வாகனங்களை நிறுத்தி, ரசித்து விட்டு செல்கின்றனர். இதேபோல, ரன்னிமேடு அருகே உள்ள, நீர்வீழ்ச்சி மலை ரயிலில் வரும், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஊட்டியிலும் மழை :
ஊட்டியிலும் நேற்று மழை பெய்தது. ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து கொண்டிருந்த சுற் றுலா பயணிகள் இந்த மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்தனர். சிலர் குடை பிடித்து கொண்டு படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டினர்.
ஆனால் பலத்த மழை பெய்ய தொடங்கியதால் படகு இல்ல அதிகாரிகள்அவர்களை கரைக்கு திரும்பும்படி அறிவுறுத்தினர். மேலும் மழை பெய்து முடியும் வரை மிதி படகு சவாரி மற்றும், துடுப்பு படகு சவாரியும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த மழையில் கரையில் இருந்த படகுகள் ஏரிக் குள் அடித்து செல்லப்பட்டன. இதனை படகு இல்ல ஊழியர்கள் மீட்டனர்.
இதேபோல் ஊட்டி படகு இல்லம், தொட்ட பெட்டா, மரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள் இந்த மழையால் கடும் அவ திக்குள்ளாகினர்.












Click it and Unblock the Notifications