சென்னை, காஞ்சிபுரத்தில் காற்றோடு ஜில் மழை
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் காற்றோடு மழை பெய்து வருகிறது.
சென்னை : சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காற்றோடு மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக காலையில் வெயிலும், மாலையில் மழையுமாக வானிலை மாறி வருகிறது.
நேற்று மாலையில் மழை பெய்து குளிர்வித்த நிலையில் காலையில் வழக்கம் போல வெயிலடித்தது.
இந்த நிலையில் பிற்பகல் முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் சாரலுடன் மழை பெய்தது.
சென்னை எழும்பூர், கிண்டி, தி.நகர், முகப்பேர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மாலையில் மழை பெய்தது.
அதேபோல் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சாந்தோம், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல சென்னையின் புறநகர் பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் காற்றோடு கனமழை பெய்து வருகிறது. மழையின்றி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. தொடர் மழை பெய்தால் மட்டுமே ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் தீரும் என்பது சென்னைவாசிகளின் கருத்தாகும்.