குற்றாலத்தில் கண்ணாமூச்சி ஆடும் சாரல்: வியாபாரிகள் கலக்கம்
நெல்லை: குற்றாலத்தில் திடீரென சாரல் மாயமானதால் வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
குற்றாலத்தில் சீசன் கண்ணாமூச்சி காட்டி வந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக சாரல் நன்றாக பெய்தது. குறிப்பாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கும் அளவுக்கு தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் மீண்டும் தலை காட்டத் துவங்கியுள்ளது. இருப்பினும் மெயினருவி, ஆண்கள், பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஐந்தருவியின் ஐந்து பிரிவுகளிலும், பழைய குற்றாலம், புலியருவியில் ஓரளவுக்கு தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர்.
கூட்டம் அதிகரித்து வருவதால் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணிக்கு நிறுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். புலியருவி, பழைய குற்றால அருவிகளில் சிலர் விதிமுறைகளை மீறி சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கின்றனர். ஓரிரு போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருப்பதால் அவர்கள் துணிச்சலாக விதிகளை மீறுகிறார்கள்.
விடுமுறை நாட்களில் காலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க மொபைல் போக்குவரத்து போலீசாரையும், கூடுதல் போலீசாரையும் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications