சென்னையில் இரவிலும் விடாமல் பெய்த மழை… 2 நாட்களுக்கு நீடிக்குமாம்!
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தலைநகர் சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்றும் 2வது நாளாக நல்ல மழை பெய்தது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் நேற்றும் மாலையில் மழை வெளுத்துக் கட்டியது. அதேசமயம், இரவிலும் தொடர்ந்து பெய்தபடி இருந்தது.
தற்போது தென் மேற்குப் பருவ மழைக் காலம். இதனால் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை காணப்படுகிறது.
கொளுத்திய வெயில்
இருப்பினும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவித்து வந்தனர்.
2 நாட்களாக மழை
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வட மாவட்டங்களின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தினசரி சராசரியாக 1 மணி நேர அளவுக்கு மழை பெய்தது.
நேற்றும் மழை
நேற்று மாலையும் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த மழை சென்னைவாசிகளை சற்று குளிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவிலும் மழை நீடித்ததால், வெட்கை தணிந்தது.
2 நாட்களுக்கு நீடிக்கும்
இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்குமாம். இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் தரைக்காற்று பலமாக வீசும்.
அதிகபட்சமாக அண்ணா…
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.