இலங்கை அருகே மேல்அடுக்கு சுழற்சி... தென் தமிழகத்தில் மழை நீடிக்கும்!
சென்னை: தென் இலங்கைக்கு அருகே புதிதாக உருவாகி வரும் மேல்அடுக்கு சுழற்சியினால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேல்அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தற்போது தென் இலங்கைக்கு அருகே புதிதாக மேல்அடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், "லட்சத்தீவு கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த மேல்அடுக்கு சுழற்சி, வடக்கு நோக்கி நகர்ந்து கர்நாடகம் அருகே அரபிக்கடலில் நிலைகொண்டு அதே இடத்தில் நீடித்து வந்தது. தற்போது அது, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை யாக மாறியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு மேற்கு திசை நோக்கி அது செல்லக்கூடும். இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இதற்கிடையே, தென் இலங்கைக்கு அருகில் புதிதாக மேல் அடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி இருக்கிறது. இதன்காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களிலும், வடமாவட்டங் களின் உட்பகுதியில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்றார்.
புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக அதிகபட்சமாக பெரும்புதூர், தாமரைப்பாக்கம், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. பூண்டி, முசிறியில் 7, திருவாலங்காடு, வேலூர், பாளையங்கோட்டை, நாங்குநேரியில் 6, ஒசூர், குளித் தலை, திருக்கோவிலூர், கரூர், காவேரிப்பாக்கம், வாலாஜா, சூளகிரி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications