சென்னையில் தொடங்கியது அடுத்த சுற்று மழை .. இரவில் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை!
சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை பல இடங்களில் மழை நின்று விட்டாலும் கூட வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட முன்னதாக தொடங்கியது. சென்னையில் கடந்தமாதம் தொடர்ந்து பல நாட்கள் கனமழை பெய்ததால், நகரின் பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளித்தன.
ஆனால், தீபாவளி சமயத்தில் மழை சற்று தணிந்தது. பின்னர் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.

தீடீர் மழை...
இந்நிலையில், நேற்றிரவு திடீரென சென்னையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இடி, மின்னலுடன்...
மந்தைவெளி, சாந்தோம், மயிலாப்பூர், அடையார், கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சாலைகளில் மழை நீர்...
இரவு முழுவதும் மழை விட்டு விட்டுப் பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மக்கள் சிரமம்...
இந்த திடீர் மழையை மக்கள் எதிர்பார்க்கததால், கைகளில் குடை, ரெயின் கோட் போன்ற பாதுகாப்பு சமாச்சாரங்கள் இல்லாமல் மழையில் நனைந்து சிரமத்திற்கு ஆளானார்கள்.

கருமேகக் கூட்டம்...
காலையில் சில இடங்களில் லேசான வெயில் அடித்த போதும், தொடர்ந்து கருமேகக் கூட்டம் வானில் காணப்படுகிறது. எனவே, மழை வரும் என எதிர்பார்த்து மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை உள்ளிட்ட பொருட்களுடன் வெளியில் பயணம் செய்கின்றனர்.

மழை நீடிக்கும்...
இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் விடுமுறை...
மழை காரணமாக இன்று காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications