ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற முடியுமா? ஈ.வி.கே.எஸ். பரபரப்பு பேட்டி
தற்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறுவது கடினம் என ஈ.வி.கே.எஸ. இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை: தற்போது உள்ள அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறுவது கடினம். ஆனால் அவரால் முடியாது என கூறவில்லை என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சென்னையில் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சனிக்கிழமை தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், குமரி அனந்தன், இளங்கோவன், தங்கபாலு, தனுஷ்கோடி ஆதித்தன், கார்த்திக் சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், நாசே ராமச்சந்திரன், குஷ்பு ஆகியோர் பங்கேற்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், விஜயதரணி, மகளிர் அணி தலைவி ஜான்சிராணி, டி.யசோதா, விஜய இளங்செழியன், செல்வப்பெருந்தகை, பவன் குமார், கோபண்ணா உள்பட 200 பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் செல்லாத நோட்டு அறிவிப்பு, ஜெயலலிதாவுக்கு இரங்கல், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம், விவசாயிகள் மரணம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகர் சிவாஜி சிலையை கடற்கரை சாலையிலேயே வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வரை பன்னீர்செல்வத்தை சந்திக்க காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
அப்போது, தற்போது உள்ள அரசியல் சூழலில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறமுடியுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். இப்போது உள்ள சூழலில் அது கடினம். ஆனால் ரஜினியால் முடியாது என நான் கூறவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications