தமிழகம், புதுவையில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை: வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மலையையொட்டியுள்ள இதர மாவட்டங்களிலும் மழை பெய்கிறது.
இந்த நிலையில், ''வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.