2ஜி ஊழலில் சிக்கிய ஆ.ராசாவிற்கு ரூ.3.75 கோடி தான் சொத்து: கடன் ரூ. 35 லட்சம்!
நீலகிரி: நீலகிரி லோக்சபா தொகுதி தி.மு.க.,வேட்பாளரான ஆ.ராசாவின் சொத்து மதிப்பு ரூ.3.75 கோடி என அவரது வேட்புமனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஊழலில் சுமார் ரூ 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப் பட்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.
2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணையின்போது, திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி பெறப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், நேற்று தனக்கு ஒதுக்கப் பட்டுள்ள நீலகிரி லோக்சபா தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் ஆ.ராசா தனது வேட்புமனுவை நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான முனைவர் பொ.சங்கரிடம் தாக்கல் செய்தார். அவருடன் நீலகிரி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அருண்குமார், மாவட்ட கழக செயலாளர் ராமச்சந்திரன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பா.மு.முபாரக், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சகாதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதில் அவரது சொத்து விபரம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது :-
மொத்த சொத்தும்
அவர் தாக்கல் செய்த சொத்து கணக்கில், அவருக்கு 3.75 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக ராசா தெரிவித்துள்ளார்.
கடன்...
மேலும், தனக்கு 35.5 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் ராசா குறிப்பிட்டுள்ளார்.
அசையும் சொத்துக்கள்...
இதில் ராசாவிற்கு அசையும் சொத்துக்களாக ராசா பெயரில் நகை, மற்றும் பணமாக வங்கி இருப்பு வகையில் ரூ.1 கோடியே 45 லட்சத்து 90 ஆயிரத்து 709ம், அவரது மனைவி பரமேஸ்வரி பெயரில் ரூ.93 லட்சத்து 93 ஆயிரத்து 597ம், மகள் மயூரி பெயரில் 18 லட்சத்து 15 ஆயிரத்து 400ம் உள்ளதாம்.
பாரம்பரிய சொத்து...
அதேபோல், பாரம்பரிய குடும்ப சொத்தாக ரூ.41 லட்சத்து 03 ஆயிரத்து 419ம், அசையா சொத்தாக ஆ.ராசா பெயரில் ரூ.47 லட்சத்து 72 ஆயிரத்து 794க்கும், அவரது மனைவி மகேஸ்வரி பெயரில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 975ம், பாரம்பரிய சொத்தாக ரூ.14 லட்சத்து 53 ஆயிரத்து 875க்கும் என ரூ.3 கோடியே 75 லட்சத்து 42 ஆயிரத்து 890க்கு உள்ளதாக அவர் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
நான் குற்றமற்றவன்...
வேட்புமனு தாக்கலுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராசா, ‘2ஜி அலைக்கற்றையில் ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக என்மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் விடையளித்து இருக்கிறேன்.
நான் புரட்சிக்காரன்...
தொலைதொடர்புத்துறையில் நான் செய்தது புரட்சி. நான் ஒரு புரட்சிக்காரன். சி.பி.ஐ.,நடத்திய சோதனையில் என்வீட்டிலிருந்து ஒரு ரூபாய் பணம் கூட கைப்பற்றியத்தில்லை என்னுடைய பெயரில் ஒரு சொத்துகூட இல்லை என்பது தெரியவந்தது. ஆகையால் நான் குற்றமற்றவன் என விளக்கமளித்துள்ளார்.