1.15 கிராமில் தங்க விசிறி செய்த ராஜபாளையத்து சமுத்திரகனி: அழகோ அழகு
விருதுநகர்: ராஜபாளையத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவர் 1. 15 கிராமில் தங்க மின்விசிறியை செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சமுத்திரகனி(40). பொற்கொல்லர். அவர் ராஜபாளையத்தில் உள்ள அம்பலபுலி பஜாரில் நகைக்கடை வைத்து நடத்துகிறார்.
சமுத்திரகனிக்கு தங்கத்தில் வித்தியாசமானவற்றை செய்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர் கடந்த 2007ம் ஆண்டு 44 மில்லிகிராம் தங்கத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பையை செய்தார். அதன் பிறகு ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த ஒன்றரை கிராமில் தங்க ஹெல்மெட் செய்தார்.
கடந்த 2014ம் ஆண்டு 30 மில்லிகிராம் தங்கத்தில் தேசியக் கொடியை செய்த அவர் இந்த ஆண்டு 260 மில்லிகிராமில் தங்க டார்ச்லைட் செய்து அசத்தியுள்ளார். இந்நிலையில் அவர் 1 கிராம் 150 மில்லி கிராம் தங்கத்தில் மின்விசிறி ஒன்றை செய்துள்ளார்.
3.45 இன்ச் உயரம் கொண்ட அந்த மின்விசிறையை செல்போனில் உள்ள மோட்டாரை பயன்படுத்தி செல்போன் பேட்டரி மூலம் இயக்குகிறார். மின் விசிறியில் உள்ள சிறிய சுவிட்சை போட்டால் காற்று வருகிறது. அவர் 45 நாட்களில் இந்த மின்விசிறியை செய்துள்ளார்.
தங்க மின்விசிறியை அப்பகுதி மக்கள் பார்த்து வியந்து வருகிறார்கள்.