பெரியபாண்டியன் சுடப்பட்ட விவகாரம்: சென்னை இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீஸ் வழக்கு
பெரியபாண்டிய சுட்ட விவகாரத்தில் சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகரின் மீது ராஜஸ்தான் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜோத்பூர்: கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் குறி தவறி பெரியபாண்டியனை துப்பாக்கியால் சுட்டது தொடர்பாக சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகரின் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெயத்ரன் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் நகைக் கடையில் மூன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற முக்கிய கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த வியாழக்கிழமை ராஜஸ்தான் சென்றனர். அங்கு கொள்ளையர்கள் தங்கியிருந்த இடத்தை பெரியபாண்டியன் உள்ளிட்டோர் சுற்றி வளைத்தபோது அவர்கள் பெரியபாண்டியனிடம் இருந்து துப்பாக்கியை பறித்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பெரியபாண்டியன் பலியாகிவிட்டார். கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் காயமடைந்தார்.

எஸ்பி அறிக்கை
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்ட எஸ்.பி. தீபக் பார்கவ் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கொள்ளையர்கள் பாலி மாவட்டத்தில் ராம்வாஸ் கிராமத்தில் செயல்படாத ரசாயன தொழிற்சாலையில் தங்கியிருந்தனர்.

4 போலீஸார் தப்பினர்
அவர்களை பெரியபாண்டியன் தலைமையிலான போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த தொழிற்சாலைக்குள் 5 போலீஸாரும் நுழைந்தபோது கொள்ளையர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 4 போலீஸார் தப்பி வெளியே வந்தனர்.

முனிசேகரின் துப்பாக்கி தோட்டா
ஆனால் கொள்ளையர்களிடம் சிக்கி கொண்ட பெரியபாண்டியனை காப்பாற்றுவதற்காக கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கியால் சுட்டார். அப்போது அவரது தோட்டா குறி தவறி பெரியபாண்டியன் மீது பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார் என்று பெரியபாண்டியன், முனிசேகரின் துப்பாக்கிகளை ஆய்வு செய்த பின்னர் எஸ்.பி. தீபக் பார்கவ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ராஜஸ்தான் போலீஸ் முனிசேகர் மீது வழக்கு
இதன் அடிப்படையில் அஜாக்கிரதையாக இருந்ததன் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் ஜெயத்ரன் போலீஸார் சென்னை கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். உடன் சென்றிருந்த மற்ற 3 தமிழக போலீஸாரும் விசாரணை வளைத்துக்குள் இருப்பதாக ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications