ஆளுநர் மாளிகையில் உள்ள தர்கா குளம் நிரம்பி கிண்டி சாலைகளில் வெள்ளம்
சென்னை: தொடர் மழையின் காரணமாக சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தினுள் உள்ள தர்கா குளம் நிரம்பி வழிந்தது. இதனால் உபரி நீர் வெளியேறி அருகில் உள்ள பட்டேல் சாலை வெள்ளக்காடாக மாறியது. இதையடுத்து, கிண்டி மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த மாதம் 28-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்துசென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. நேற்று மாலை வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சென்னை நகரில் வீதிகள் வெள்ளக்காடாக மாறின. பல்வேறு பகுதிகள் தண்ணீரில் தத்ளித்ததால் இரவு முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜெமினியிலிருந்து கலைவாணர் பாலம் வரை ஜி,என்.செட்டிச் சாலையில் படகு போக்குவரத்து நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது ஆளுநர் மாளிகையில் உள்ள தர்கா குளம் நிரம்பி வழிந்து அருகில் உள்ள சர்தார் பட்டேல் சாலை முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தண்ணீர் முழங்கால் வரை தேங்கியுள்ளது. ஆளுநர் மாளிகை உள்ள பணியாளர் கேட்டிலிருந்து ராஜ்பவான் பிரதான கேட் வரை தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
அதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளது. பல்கலைக் கழக ஊழியர் குடியிருப்பு மற்றும் பல்கலைக் கழக மாணவர் விடுதி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் புகுந்திருப்பதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் தண்ணீர் குளம்போல தேங்கி உள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.












Click it and Unblock the Notifications