திமுகவிற்கே எங்கள் ஆதரவு... திருச்சி ரஜினி ரசிகர்கள் அறிவிப்பு!
திருச்சி: தமிழக சட்டசபைத் தேர்தலில் திருச்சியின் 9 தொகுதி திமுக கூட்டணி வேட்பாளார்களுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்ற தலைவராக இருப்பவர் கர்ணன். இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக அலுவலகத்துக்கு சென்று, மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என்.நேருவை சந்தித்து மாலை, கிரீடம் அணிவித்து ஆதரவு தெரிவித்தார். அவருடன் மன்ற நிர்வாகிகளான மாவட்ட அமைப்பாளர் ராயல் ராஜூ, ஆலோசகர் அபூர்வா மணி, பொருளாளர் நாசர், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் சத்யா, திருவெறும்பூர் சாமி மாரியப்பன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் சென்றிருந்தனர்.
பின்னர் மன்ற தலைவர் கர்ணன், "திமுக ஆட்சிக்காலத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் மாவட்ட செயலாளர் நேரு, எங்கள் மன்றத்தினருக்கு பக்க பலமாக இருந்துள்ளார். எங்கள் மன்றத்தின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர் செய்து வருகிறார். இதனால் நாங்கள் வரும் தேர்தலில் அவர் போட்டியிடும் திருச்சி மேற்கு தொகுதி மட்டுமல்லாது, மாவட்டத்தில் திமுக கூட்டணி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தீவிர தேர்தல் பணியாற்ற உள்ளோம்.
எங்கள் தலைவர் ரஜினிகாந்த், வரும் தேர்தலில் தனது ரசிகர்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என்று கூறியிருக்கிறார். இதனால் நாங்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான ரஜினி ரசிகர் மன்றத்தினர் திமுகவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் எங்கள் தலைவர் ரஜினி நடித்த குசேலன், கமல் நடித்த விஸ்வரூபம், விஜய் நடித்த தலைவா போன்ற படங்கள் வெளியாவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. அப்போது கலைத்துறையினருக்கு திமுக தான் பக்க பலமாக இருந்தது. முதல்வர் ஜெயலலிதா சினிமா துறையை சேர்ந்தவராக இருந்தாலும், இந்த விஷயத்தில் அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் தான் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.
எங்கள் தலைவர் ரஜினிகாந்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இனிமேல் அவர் இப்படி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறி தொடர்ந்து பேசினால், தமிழகம் முழுவதும் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் இன்று மாலை சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜயகாந்த் உருவபொம்மை எரிக்க உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.