தொடங்கியது அரசியல் தலைவர்களுடன் ரஜினியின் சந்திப்பு... இன்று தமிழருவி மணியனுடன் ஆலோசனை!
சென்னை: விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்கவிருக்கும் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார் தமிழருவி மணியன்.
இந்தச் சந்திப்பின்போது, ரஜினியின் அரசியல் வருகை, புதிய கட்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரஜினியின் அரசியல் பிரவேசம், புதிய கட்சி குறித்துதான் கடந்த 15 நாட்களாக இந்தியாவெங்கும் பேச்சாக உள்ளது. குறிப்பாக அரசியல் களத்தில் வாதப் பிரதிவாதங்கள் அனல் பறந்து கொண்டுள்ளன.
இந்த நிலையில், ரஜினி முக்கிய செய்திச் சேனல்களின் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் சந்தித்துப் பேசினர். அடுத்ததாக அரசியல் தலைவர்களும் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் சந்தித்து வருகின்றனர்.
இன்று நடிகர் ஆனந்த ராஜ் ரஜினியை அவர் வீட்டில் சந்தித்துவிட்டுச் சென்றார். இவர் அதிமுகவில் முக்கியப் பிரமுகர், பேச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் பிரமுகரும், காந்திய மக்கள் கட்சி தலைவருமான தமிழருவி மணியன் இன்று ரஜினியைச் சந்தித்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம், கட்சி குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பின்போது நடிகர் ஜீவாவும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.