ரஜினி பேசி விட்டார்.. ஆனால் சொன்ன கருத்தில் நிலையாக இருக்கனுமே!
Recommended Video

சென்னை: வசதிக்கேற்ப அரசியல் என்ற புதிய பாணி அரசியலை செய்து வரும் சினிமாக்காரர்கள் தமிழக மக்களின் உரிமை குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஏதாவது பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பில் அப்பாவி மக்கள் உள்ளனர்.
ரஜினி வழக்கம் போல லேட். இப்போதுதான் கருத்து கூறியுள்ளார். கமலும் கருத்து கூறியுள்ளார். அரசியல் அபிலாஷையுடன் நடமாடிக் கொண்டிருக்கும் விஷால் வாயே திறக்கவில்லை.
மக்களுக்கு அடி கிடைக்கும்போதெல்லாம் இவர்கள் விரைந்து பேச வேண்டும். அவர்களுக்காக இறங்கி ஓடி வர வேண்டும். மக்களோடு மக்களாக மாறி போராட வேண்டும். வசதிக்கேற்ப அரசியல் செய்தால் அது சந்தர்ப்பவாதம். கர்நாடகத்தில் பல நடிகர்கள் தங்களது மாநில உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் பலரும் அப்படி இருப்பதில்லை.

வெட்கம் கொஞ்சம் கூட இல்லையே
தமிழக மக்களின் உழைப்பையும், பொருளாதாரத்தையும், மனித நேரங்களையும் சுரண்டிப் பிழைக்கும் நடிகர்கள் அந்த மக்களுக்காக போராட முன்வருவதே இல்லை. சொக்கா கசங்காமல் ஷோ காட்டி விட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் வெட்கப்படுவதே இல்லை.

கர்நாடகம் ரொம்ப பெஸ்ட்
மறுபக்கம் கர்நாடக நடிகர்களைப் பாருங்கள். பிரகாஷ் ராஜ் முதல்கொண்டு பல நடிகர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் தங்களது மாநில நலனுக்காக குரல் கொடுக்கிறார்கள். போராடுகிறார்கள். உணர்வுகள் அவர்களுக்கு இயல்பாக வருகிறது. முன்வந்து குரல் கொடுக்கிறார்கள்.

இவர்களுக்கு பதவிதான் முக்கியம்
ஆனால் இங்குள்ள அரசியல்வியாதி பிடித்து திரியும் நடிகர்கள் பதவிப் பிச்சைக்காரர்களாக உள்ளனர். பதவிதான் தேவை அவர்களுக்கு. தமிழகத்தை மட்டும் ஆட்டிப்படைக்க வேண்டும். தங்களைக் கொண்டாடும் மக்கள் பிச்சைக்காரர்களாக திரிந்தால் கூட இவர்களுக்கு கவலை இல்லை.

மக்கள் தூக்கி எறிய வேண்டும்
தங்களுக்கு பிரச்சினை வரும்போது குரல் கொடுக்காத யாரையும் மக்கள் மதிக்க கூடாது. தூக்கி குப்பையில் எறிய வேண்டும். காவிரிப் பிரச்சினையில் பல்டி மேல் பல்டி அடித்தவர் ரஜினி. சத்யராஜுக்கு கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுத்தபோது அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தவறியவர். தமிழகத்தில் தான் பேசிய பேச்சுக்காக கன்னட அமைப்பினரிடம் மன்னிப்பு கேட்டவர். இப்படிப்பட்டவர் இப்போதும் ஒரு கருத்தை கூறியுள்ளார். ஆனால் இதில் நிலையாக இருப்பாரா அல்லது இந்த கருத்துக்கும் மன்னிப்பு கேட்பாரான்னு தெரியலை.

விவசாயிகளுக்காக இதை செய்யுங்கள்
யாரெல்லாம் காவிரிப் பிரச்சினையில் தங்களைக் கைவிட்டார்களோ அவர்களை மக்கள் தூக்கி எறிந்து மூலையில் வீச வேண்டும். இப்போதாவது உணர்வு பெறுங்கள் மக்களே.. விவசாயிகளுக்காக இதையாவது செய்யுங்கள் குறைந்தபட்சம்.












Click it and Unblock the Notifications