ராஜ்நாத் சிங் சென்னை வருகை… இன்று பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு அறிவிப்பு- பாமக இருக்கா?
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்று திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.
இன்று சென்னை வரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், பிற்பகல் 12 மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவர் வெளியிடுவார் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர்ராவ், பாமகவுடனான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், கூட்டணியில் தொடர்வது பற்றி பாமகதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மு.க. அழகிரியை தொடர்பு கொண்டீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அவரை தொடர்பு கொள்வதில் என்ன தவறு என்றும் முரளிதர் ராவ் கேள்வி எழுப்பினார்.