இப்போ நடிகன்... நாளைக்கு? - 20 வருஷத்துக்கு முன்பு பேசியதையே பாலீஸ் செய்து சொன்ன ரஜினி!
நான் இப்போது நடிகன் நாளைக்கு என்னவாக இருப்பேன் என்பது எனக்கு தெரியாது என்று மீண்டும் தனது ரசிகர்களை குழப்பியுள்ளார் ரஜினி.
சென்னை: இன்றைக்கு நான் மக்களை மகிழ்விக்கும் நடிகனாக இருக்கிறேன். நாளைக்கு என்னவாக இருப்பேன் என்று எனக்கு தெரியாது அது கடவுள் கையில் இருக்கு என்று ரஜினி கூறியுள்ளார். காலம் கட்டளையிடும் அதன்படி நடப்பேன் என்று மீண்டும் தனது ரசிகர்களை குழப்பியுள்ளார் ரஜினி.
1980களில் இருந்தே ரஜினியின் அரசியல் பேச்சுக்கள் தொடங்கிவிட்டது. மன்னன், படையப்பா என ஜெயலலிதாவிற்கு எதிரான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்தார் ரஜினி.
ரஜினி வாய்ஸ்
1996ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான அலை வீசியது. இன்னொருமுறை ஜெயலலிதா தமிழ்நாட்டு முதல்வரானால் அந்த ஆண்டவனே தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றார். அவரை அரசியலுக்கு வர ரசிகர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் சம்மதிக்க வில்லை.
நேற்று... இன்று... நாளை
நேற்று நான் பஸ் கண்டக்டர்... இன்று நடிகன்... நாளை? என்று கேட்டு மேலே கையை காட்டி அது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது என்று 20 ஆண்டுகளுக்கு முன்பாக கூறினார்.
ரசிகர்கள் ஆர்வம்
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் 20 ஆண்டுகளாக அழைப்பு விடுத்து வருகின்றனர். பல ரசிகர்கள் ஓய்வு பெறும் வயதை எட்டி விட்டனர். அவர்களின் அரசியல் ஆசையும், ஆர்வமும் அப்படியேதான் இருக்கிறது.
ஜெயலலிதா மரணம்
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு துக்ளக் விழாவில் இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி ரஜினி பேசிய பேச்சுக்கள் பரபரப்பை பற்ற வைத்தது. இது ரஜினி ரசிகர்களின் அரசியல் ஆசையை தூண்டி விட்டுள்ளது. ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
கடவுள் கையிலதான் இருக்கு
இந்த நிலையில் இன்று ரசிகர்களை சந்தித்து பேசினார் ரஜினி. பல ரசிகர்கள் எம்எல்ஏ, அமைச்சர்கள் கனவுடன் இருப்பதாக கூறிய அவர். அது தவறான எண்ணம் என்றார். அரசியல் தவறில்லை. ஆனால் அதை வைத்து பணம் சம்பாதிப்பது தவறு என்றார். இன்றைக்கு நான் நல்ல நடிகனாக மக்களை மகிழ்விக்கிறேன். என்னுடைய வாழ்க்கை கடவுள் கையில இருக்கு... நாளை என்னவாக மாறுவேன் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
கடவுள் கட்டளையிடட்டும்
கடவுள் கட்டளையிட்டால் அரசியல் கட்சி துவங்கலாம். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்றார்.
ஒரே குழப்பமா இருக்கே
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பம். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய அதே டயலாக்கை சற்றே பாலீஸ் செய்து பேசியுள்ளார் ரஜினி. அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? வருவேன் என்று ஒரு வார்த்தையில் கூறியிருக்கலாம். இல்லை அரசியல் நமக்கு சரிப்படாது என்று சொல்லியிருக்கலாம். மீண்டும் கடவுளை கை காட்டி விட்டு ரசிகர்களை குழப்பிவிட்டார் ரஜினி.