எங்கே சென்றது தமிழக அரசு? பன்னீர் செல்வம் அரசை கடுமையாக சாடிய ராம மோகன ராவ்
சென்னை: தலைமைச் செயலராக இருந்த எனது அலுவலகத்திற்குள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை நுழைந்ததது. இதை தடுக்காமல் எங்கே போனது தமிழக அரசு என்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ராம மோகனராவ் தெரிவித்தார்.
அண்ணா நகரிலுள்ள அவரது இல்லத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்த ராம மோகன ராவ் கூறுகையில், "மேடம் (ஜெயலலிதா) உயிரோடு இருந்திருந்தால் சிஆர்பிஎப் தலைமைச் செயலகம் உள்ளே வந்திருக்க முடியாது.

ஒரு மாநில அரசின் தலைமைச் செயலர் அறைக்குள் எப்படி சி.ஆர்.பி.எப் போகலாம்? அப்படி என்ன கண்டுபிடித்தார்கள்? ஒன்றும் இல்லை? எனது மகன் பெயரில் சோதனை வாரண்ட் கொண்டு வந்துவிட்டு எனது வீட்டில் அவர்கள் சோதனை நடத்தியது ஏன்? நான் குறி வைக்கப்பட்டுள்ளேன்.
என்னை, 26 மணி நேரம் ஹவுஸ் அரெஸ்ட் செய்திருந்தனர். முதலில் என்னை டிரான்ஸ்பர் செய்துவிட்டே பிறகு சோதனை செய்திருக்கனும். ஆனால் தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்குள் சி.ஆர்.பி.எப் நுழைந்தது தமிழகம் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதைதான் காண்பிக்கிறது.
எங்கே சென்றது தமிழக அரசு? ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. நான் புரட்சி தலைவி அம்மாவால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளர். இன்னமும் என்னை சஸ்பெண்ட் செய்த உத்தரவை அரசு காண்பிக்கவில்லை. எனவே இப்போதும் நான்தான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர். இப்போது உள்ள தலைமைச் செயலாளர் ஒருவேளை பொறுப்பு தலைமைச் செயலாளராகத்தான் நியமிக்கப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன். இவ்வாறு ராம மோகன ராவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications