ரூ1,000 கோடிக்கு 11 தியேட்டர்களை வாங்கிய சசிகலா... மீண்டும் திரும்புகிறதா "91-96" ? ராமதாஸ் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் சசிகலா குடும்பத்தினர் சொத்துக்களை வளைத்து போடுவதாகவும், மீண்டும் திரும்புகிறதா 1991-96 கலாச்சாரம்? என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் 11 திரைகள் கொண்ட லூக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தை ஜாஸ் சினிமா என்ற நிறுவனம் வாங்கி விட்டது என்பது தான் அச்செய்தியில் கூறப்பட்டுள்ள விஷயம்.

Ramadoss Allegation about on sasikala family

ஜாஸ் சினிமா நிறுவனம் யாருக்கு சொந்தமானது என்பது தான் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதற்கு காரணமாகும். வருவாய்க்கு மீறி ரூ.66.65 கோடி சொத்துக் குவித்தது தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவுடன் சேர்த்து தண்டிக்கப்பட்ட இளவரசி தான் இந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார். சொத்து வழக்கில் தண்டிக்கப்பட்ட இன்னொருவரான சசிகலா, அவரது உறவினர் சிவக்குமார், இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் ஆகியோர் தான் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆவர். சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் தான் மிடாஸ் மது ஆலையிலும் இயக்குனர்களாக உள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக லூக்ஸ் மல்டிபிளெக்ஸ் திரையரங்கத்தை அதன் உரிமையாளர்களான சத்யம் திரையரங்க குழுவினரிடமிருந்து இளவரசி தலைவராக உள்ள ஜாஸ் சினிமா நிறுவனம் வாங்கிவிட்டது. முதலில் திரையரங்கத்தை விற்க சத்யம் குழுமம் மறுத்து விட்டதாகவும், ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டதாலும், சத்யம் குழும உரிமையாளர்கள் மீது சில பொய் வழக்குகள் போடப்பட்டு மிரட்டப்பட்டதாலும் வேறு வழியின்றி லூக்ஸ் திரையரங்கத்தை விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இத்திரையரங்கம் சசிகலா குழுவினரால் மிரட்டி வாங்கப்பட்டது குறித்து ஓராண்டுக்கு முன்பே பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். இப்போது நாளிதழ்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து நான் கூறியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லூக்ஸ் திரையரங்கத்தை சசிகலா குழுவுக்கு விற்பனை செய்ய அதன் உரிமையாளர்கள் மறுத்து விட்டதால், அத்திரையரங்கம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆன பிறகும், அதை திறக்க காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகம் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்ட நிலையில், அதில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்குகள் 15 மாதம் கழித்து 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் திறக்கப்பட்டன. இதிலிருந்தே திரைமறைவில் நடந்த உண்மைகள் என்ன? விடுக்கப்பட்ட மிரட்டல்கள் என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியும்.

லூக்ஸ் திரையரங்கம் மட்டுமின்றி, சென்னை வடபழனி விஜயா ஃபோரம் மால் வணிக வளாகத்தில் அமைத்துள்ள 18 திரைகள் கொண்ட பிளாசோ திரையரங்கத்தையும், அமைந்தகரை ஸ்கை வாக் வளாகத்தில் உள்ள 7 திரைகள் கொண்ட பி.வி.ஆர்திரையரங்கத்தையும் வாங்குவதற்காக சசிகலா குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். இவற்றில் பிளாசோ திரையரங்கமும் சத்யம் குழுமத்திற்கு சொந்தமானதாகும். இத்திரையரங்கை விற்க உரிமையாளர்கள் தயங்குவதால் அவர்களுக்கு தொடர்ந்து அழுத்தமும், மிரட்டலும் விடப்பட்டு வருகிறது. வடபழனி விஜயா ஃபோரம் மால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட நிலையில், அதில் அமைந்துள்ள பிளாசோ திரையரங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்படாததால் 30 மாதங்களுக்கும் மேலாக அவை பூட்டியே கிடப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், பி.வி.ஆர். திரையரங்கத்திற்கும் சென்னை மாநகராட்சி மூலமாகவும், காவல்துறை மூலமாகவும் தொடர்ந்து அழுத்தங்கள் தரப்பட்டு வருவதாக தெரிகிறது.

1991-96 ஆட்சிக் காலத்தின் போது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை ஜெயலலிதா, சசிகலா குழுவினர் அடிமாட்டு விலைக்கு வாங்கினர். இதற்காக விசாரணை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு விடுதலையானார்கள். ஜெயலலிதா இப்போது தங்கியிருக்கும் கொடநாடு எஸ்டேட் முதல் பையனூர் மாளிகை, சிறுதாவூர் மாளிகை, தமிழகத்தில் பல பகுதிகளில் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள நிலங்கள் ஆகியவை எப்படி வளைக்கப்பட்டன என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் அறியும்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அமிர்தாஞ்சன் மாளிகையை பறிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும், அதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களும் இன்னும் மக்கள் மனதிலிருந்து அகலவில்லை. இப்போது சொத்துக்களை பறிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் 1991&96 காலத்தில் நடந்தவற்றைத் தான் மீண்டும் நினைவூட்டுகின்றன.

1991-96 ஆட்சிக் காலத்தில் சசிகலாவின் கண்ணில் பட்ட கட்டிடங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. அதற்காகத் தான் 1996 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் மறக்கமுடியாத பாடம் புகட்டினர். அப்போது நடந்ததை மறந்து சொத்துக்களை மிரட்டிப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சசிகலா குழுவுக்கும், அவர்களுக்கு துணையாக இருக்கும் ஜெயலலிதாவுக்கும் அப்போது புகட்டியதை விட மிக கடுமையான பாடத்தை வரும் தேர்தலில் புகட்ட மக்கள் காத்திருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+