தனியா நிற்கிறோமே, கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?: நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட ராமதாஸ்
சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் தொகுதிகளில் பாமகவின் பலம், செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடுகிறது. ஓராண்டுக்கு முன்பே பாமக தனது முதல்வர் வேட்பாளராக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸை அறிவித்தது.
இந்நிலையில் பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணியின் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் வெள்ளை பேப்பர் அளிக்கப்பட்டது. நிர்வாகிகளின் தொகுதிகளில் பாமகவின் பலம், செல்வாக்கு எப்படி உள்ளது? தனித்து போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? உள்ளிட்ட தகவல்களை பேப்பரில் எழுதுமாறு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி நிர்வாகிகளும் தங்கள் தொகுதியில் கட்சியின் பலம், வெற்றி வாய்ப்பு குறித்து பேப்பரில் எழுதிக் கொடுத்தனர். அதன் பிறகு நடந்த பாமக ஒன்றிய நகர, பேரூர், பகுதி, மண்டல செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்திலும் அவர்களிடம் கட்சியின் பலம், செல்வாக்கு குறித்து எழுதி வாங்கப்பட்டுள்ளது.