ஸ்ரீரங்கத்துக்கு மட்டும் 43 நாட்கள்... ஆர்.கே.நகருக்கு சில நிமிடங்களா?: ராமதாஸ் கேள்வி
சென்னை: ஜெயலலிதாவிற்காக இடைத்தேர்தலை திணிப்பது ஜனநாயக விரோதம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகரும் உடனடியாக ஏற்றுக் கொண்டார். அதிமுக கோட்டையான அந்தத் தொகுதியில், ஜெயலலிதா போட்டியிட வசதியாகவே வெற்றிவேல் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னை மாவட்டத்திலுள்ள இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திடீரென பதவி விலகியுள்ளார். இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அவர் எதற்காக பதவி விலகினார், யாருக்காக பதவி விலகினார் என்ற உண்மையை பாமரர்கள் கூட அறிந்திருக்கிறார்கள்.
வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக்குவித்த வழக்கில் நீதிபதி குமாரசாமியால் விடுவிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதற்காகவே இந்த பதவி விலகல் நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர்கள் பதவி விலகும் போது, சட்டப்பேரவைத் தலைவரிடம் கொடுக்கும் கடிதத்தில் பதவி விலகலுக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டியதில்லை.
ஆனால், பதவி விலகியதற்கான காரணத்தை வாக்களித்த மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும். ஆனால், ஜனநாயகத்தையும் மதிக்காமல், தமக்கு வாக்களித்த மக்களையும் மதிக்காமல் யாரோ ஒருவரை திருப்திபடுத்த பதவி விலகியிருப்பது கண்டிக்கத்தக்கது.
14-ஆவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டு வரும் 23ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதற்குப் பிறகு ஏதேனும் ஒரு தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் பதவி காலியானால் அதற்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. அதனால் தான் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக, அவர் முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்பே, இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவி விலகியுள்ளார்.
அவர் பதவி விலகல் கடிதம் கொடுத்த சில நிமிடங்களில் அது ஏற்கப்பட்டு அத்தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், இதுகுறித்த தகவல் தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால், ஊழல் வழக்கில் 27.09.2014 அன்று ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட நிமிடமே அவர் பதவி இழந்துவிட்டார் என்ற போதிலும், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு 43 நாட்கள் ஆனது. சட்டமும், விதிகளும் ஜெயலலிதாவுக்காக எப்படியெல்லாம் வளைக்கப்படுகின்றன என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
இடைத் தேர்தல் தொடர்பான பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பது அனைவரும் அறிந்தது தான். இடைத்தேர்தல்கள் தேவையற்றவை; மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை என்பது தான் எங்கள் நிலைப்பாடு. அதனால் தான் சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ, கட்சித் தாவியதாலோ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால் அங்கு இடைத் தேர்தல் நடத்தத் தேவையில்லை.
அங்கு பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அதேக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். மேற்கூறிய இரு காரணங்களுக்காகத் தான் இடைத் தேர்தல் வரும் என்பதால் அவ்வாறு கூறி வருகிறோம். ஆனால், இப்போது இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இடைத் தேர்தல் திணிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா என்ற ஒருவரின் நலனுக்காக இடைத்தேர்தல் திணிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது; அத்தொகுதியில் உள்ள 2 லட்சம் வாக்காளர்கள் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா அடுத்த தேர்தல் வரை பொறுத்திருந்து போட்டியிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. ஆனால், ஜெயலலிதா என்ற தனி மனிதருக்காக இடைத்தேர்தல் திணிக்கப்பட்டு, மக்களின் நேரமும், வரிப்பணமும் வீணடிக்கப்படக்கூடாது.
இதுபோன்ற ஜனநாயக படுகொலைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி சரியாக செயல்படாவிட்டால், அவரை வாக்களித்த மக்களே திரும்பப் பெறும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அது சாத்தியமாகவில்லை.
ஆனால், ஒரு கட்சித் தலைவர் நினைத்தால் எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் காரணமின்றி திரும்ப அழைக்க முடியும் என்பது மிகவும் ஆபத்தானதாகும். ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் சட்டங்கள் ஆகியவற்றை விட அதிக அதிகாரத்தை தனிநபர்கள் கொண்டிருப்பது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல.
எனவே, நியாயமான காரணங்கள் இல்லாமல், தனிநபர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மக்கள் மீதும், நாட்டின் மீதும் இடைத்தேர்தல்களை திணிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேவையின்றி மக்களவை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி இடைத்தேர்தலைத் திணிப்பவர்களிடமிருந்து அத்தேர்தலை நடத்துவதற்கான செலவுகளை வசூலிப்பதுடன், அவர்கள் வேறு எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்த தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம் மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications