Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமமோகன ராவ் புகார்களுக்கு முதலமைச்சரின் பதில் என்ன? ராமதாஸ்

தலைமைச் செயலாளரின் அறைக்குள் வருமானவரித்துறை சோதனை நடத்தியது பற்றி முதலமைச்சர் தொடர்ந்து அமைதி காப்பது ஐயங்களை வலுப்படுத்தும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரின் அறைக்குள் வருமானவரித்துறை சோதனை நடத்தியது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும் முதலமைச்சர் விளக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதலமைச்சர் தொடர்ந்து அமைதி காப்பது இதுகுறித்த ஐயங்களை வலுப்படுத்தும் என்றும் பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை அறிக்கையில்; "ஊழல் குற்றச்சாற்றுகள் மற்றும் வருமான வரித்துறை சோதனைகள் காரணமாக பதவி நீக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் இராமமோகன் ராவ், தமது வீட்டிலும், தலைமைச் செயலக அறையிலும் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாற்றுகளை முன்வைத்திருக்கிறார். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சவால் விடும் வகையில் அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

 Ramadoss demands explaain about IT raid of P. Rama Mohana Rao

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இராமமோகன் ராவ், தமது மகன் மீதான புகார்களுக்காக தமது இல்லத்திலும், தலைமைச் செயலக அறையிலும் சோதனை நடத்த முடியாது என்றும், இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கூறியிருக்கிறார். அதிகாரிகள் மீதோ, தனிநபர் மீதோ ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு புகார்கள் எழும்போது அவர்களுடன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்துவது வழக்கமான ஒன்று தான். அதேபோல், மாநில நிர்வாகத்தின் தலைவராக உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தும் போது, மாநிலக் காவல்துறையின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பதால் மத்திய பாதுகாப்புப் படை காவலுக்கு நிறுத்தப் பட்டது என்று மத்திய அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருப்பதும் ஏற்கக் கூடியது தான்.

ஆனால், இராமமோகன் ராவ் தம் மீதான குற்றச்சாற்றுகளை திசை திருப்பும் வகையில் முழுநேர அரசியல்வாதியாக மாறி அரசியல் வசனங்களை பேசியிருக்கிறார். தாம் 1994&ஆம் ஆண்டிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றதாகவும், அவரது வழியில் தான் தாம் நடப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

வார்த்தைக்கு வார்த்தை ஜெயலலிதாவை இழுப்பதன் மூலம் இதை அரசியல் பிரச்சினையாக மாற்றி, அதன்மூலம் அரசியல் சர்ச்சை நெருப்பை மூட்டி அதில் குளிர்காய நினைக்கிறார். இது வருமானவரித் துறையின் விசாரணையை திசை திருப்பும் முயற்சியாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்போது இதை செய்பவர் தொடர்ந்து வெளியில் இருந்தால் அனைத்து வித சாட்சிகளையும் கலைத்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, இராமமோகன் கைது செய்யப்பட வேண்டும்.

குற்றச்சாற்றுகளுக்கு உள்ளான, பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்திய ஆட்சிப்பணி அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து இது போன்று பேட்டி கொடுப்பது பணி விதிகளுக்கு எதிரானது ஆகும். இதற்காகவே அவர் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இராமமோகன் ராவ் குறிப்பிட்டுள்ள வேறு சில விஷயங்களும் குறிப்பிடத்தக்கவை. தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ஜெயலலிதாவால் தாம் நியமிக்கப்பட்டதாகவும், அந்த பதவியில் தாம் இன்னும் நீடிப்பதாகவும் கூறியிருக்கிறார். இது தமிழக அரசுக்கு சவால் விடக்கூடிய, கீழ்ப்படியாமையை காட்டும் செயலாகும்.

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல்லாம் சோதனை நடந்திருக்குமா? என்று திரும்பத் திரும்பக் கேட்டதுடன், இந்த சோதனை நடக்கும் போது அதைத் தடுக்காமல் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? என்றும் வினா எழுப்பியுள்ளார். இது தமது தவறுக்கு தமிழக அரசை துணைக்கு அழைக்கும் செயல் என்பது ஒருபுறமிருக்க, தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீதான தனது தனிப்பட்ட கோபத்தை வெளிப்படுத்தும் செயலாகவும் தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இராமமோகன் ராவ் கூறியுள்ள குற்றச்சாற்றுகள் அனைத்தும் உண்மையா? தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரின் அறைக்குள் வருமானவரித்துறை சோதனை நடத்தியது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும் முதலமைச்சர் விளக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதலமைச்சர் தொடர்ந்து அமைதி காப்பது இதுகுறித்த ஐயங்களை வலுப்படுத்தும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இந்த விஷயம் இவ்வளவு சர்ச்சையாக்கப்படுவதற்கு வருமானவரித் துறையின் பொறுப்பற்ற அணுகுமுறையும் முக்கியக் காரணமாகும். இராமமோகன் ராவ் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தி முடிக்கப்பட்டு 5 நாட்களாகிவிட்ட நிலையில், அந்த சோதனை எதற்காக நடத்தப்பட்டது, தலைமைச் செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாற்றுகள் என்ன? சோதனையில் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன? என்பது குறித்த விவரங்களை வருமானவரித்துறை வெளியிட்டிருந்தால் இந்த சர்ச்சை எழுந்திருக்காது.

இப்போதாவது இராமமோகன் ராவ் எழுப்பியுள்ள குற்றச்சாற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அந்த விவரங்களை வருமானவரித்துறை அளிக்க வேண்டும். இச்சர்ச்சைகளைக் காரணம் காட்டி, சோதனைகளை நிறுத்தி விடாமல், ஊழலில் தொடர்புடைய அனைவர் வீட்டிலும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+