"என் குழந்தையை கூட தாத்தா பார்க்கவில்லை!" அன்புமணி மகள் கண்ணீர்! பொய், கிளிசரின் என ராமதாஸ் பதிலடி
தருமபுரி: "எனக்கு பிறந்த குழந்தையை கூட தாத்தா வந்து பார்க்கவில்லை, அவரை தடுத்ததே ஜி.கே.மணிதான்" என பென்னாகரத்தில் பேத்தி சஞ்சுத்ரா கண்ணீர் மல்க பேசியுள்ளார். இதற்கு ராமதாஸும் பதிலடி கொடுத்துள்ளார். இத்தனை நாட்களாக தந்தை - மகனுக்கு இடையே இருந்து வந்த வார்த்தை போர் தற்போது தாத்தா- பேத்திகளிடையே நடந்து வருகிறது.
பென்னாகரத்தில் அன்புமணியின் மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் பாமக அன்புமணி ஆதரவு வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தனர். அப்போது சஞ்சுத்ரா பேசுகையில், தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். உங்கள் எல்லாருக்கும் தெரியும். அம்மாவுக்காக பிரச்சாரம் செய்யலாம் என வந்தோம்.

ஆனால் எங்களுக்கு மனசு கேட்கவில்லை. என்னடா இது, நாம் தருமபுரியில பிரச்சாரம் செய்துகிட்டு இருக்கோம். ஆனால் பென்னாகரத்தில் பெரிய துரோகம் நடக்குதே, அதைத்தானே மக்களிடம் நாம் பேச வேண்டும், நாம் இங்கே (தருமபுரி) என்ன செய்ய போகிறோம். எனக்கு தருமபுரி குறித்து கவலையில்லை.
ஆனால் பென்னாகரத்தில் நாம் ஜெயித்தே ஆக வேண்டும். இங்கு பாடி செல்வம் போட்டியிடுகிறார். அவரை ஜெயிக்க வைக்க வேண்டும். அந்த ஒரு விஷயத்திற்காகத்தான் நான் உங்களை பார்க்க வந்திருக்கிறேன். பாடி செல்வம் சார் சொன்னார் இல்லையா, "தமிழ்குமரன் துரோகி, அவருக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது"னு! ஆனால் அந்த துரோகத்தை நாங்கள் கூட நின்று பார்த்தோம்.
நான் சும்மா சொல்லவில்லை. என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக பொங்கல் பண்டிகை கொண்டாடினோம். ஐயாதான் எங்கள் குலதெய்வம், வழிகாட்டி! அப்படியிருக்கும் நிலையில் எனக்கு குழந்தை பிறந்து 5 மாதம் ஆகிறது.
அந்த குழந்தையை பார்க்கக் கூட இந்த ஜி.கே.மணி, ஐயாவை விடவில்லை. பேரன், பேத்தி என்றால் அவர் அத்தனை உயிராக இருப்பார். ஆனால் இன்று என் குழந்தை குறித்து கூட அவர் கேட்கவில்லை.
தனது மகன் மட்டும் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் எல்லாம் நாசமாக போக வேண்டும் என ஜி.கே.மணி நினைக்கிறார். இவர் போன்ற ஒரு கேவலமான மனித பிறவியை எல்லாம் பார்க்கவே முடியாது. சொந்த பிள்ளையை கூட நம்பாமல் எப்படியெல்லாம் மாற்றி வைத்திருக்கிறார்கள் பாருங்கள். இப்படிப்பட்டவர்கள் உங்கள் குடும்பத்திற்கு உதவுவார்களா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: "அய்யோ ஐயாவின் பேத்திகள் கண்ணீர் வடிக்கிறார்களே, சரி இவர்களுக்கு ஒரு ஓட்டு போட்டுவிடுவோம் என்பதற்காகவே அவர்கள் நடிப்பார்கள், அப்படி பொய் பேசுவார்கள். என்னை பற்றியும் ஓய்வறியா உழைப்பாளி தியாகச் செம்மல் ஜி.கே.மணியை பற்றியும் தாறுமாறாக பேசினார்கள்.
அவர்கள் கண்ணீர் வடிப்பார்கள். கண்ணீர் வராவிட்டால் யாருக்கும் தெரியாமல் கிளிசரின் போட்டுக் கொண்டு கூட அழுவார்கள். இதை பார்க்கும் பொதுமக்கள், "இந்த புள்ளை இப்படி அழுதே, கைக் குழந்தையை வைத்துக் கொண்டு ஓட்டு கேட்குதே! சரி ஒரு ஓட்டு போட்டுவிடுவோம் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு கலையில் தலைசிறந்தவர்கள்.
நடிப்பதிலும் பொய் பேசுவதிலும் சிறந்தவர்கள். அன்புமணி பொய் மூட்டை வைத்திருக்கிறார்கள். நான் இரு முறை மருத்துவமனையில் இருந்த போது அன்புமணியோ அவரது மனைவியோ, அவரது குழந்தைகளோ யாரும் என்னை பார்க்க வரவில்லை. போன் போட்டுக் கூட எப்படி இருக்கீங்கன்னு யாருமே கேட்கவில்லை என ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications