செயல்படாத நிர்வாகிகள் ஒதுங்கி கொள்ளுங்கள்... கடுகடுத்த ராமதாஸ்
சென்னை: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் பாமகவின் தயவில்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்க அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தீவிரம் காட்டிவருகிறார்.
வடதமிழகத்தில் 80 தொகுதிகளை குறிவைத்து அந்த தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது பட்டாளி மக்கள் கட்சியின் அஜெண்டாவாக உள்ளது. இந்நிலையில் பாமகவின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் ஏற்றவகையில் செயல்படாத நிர்வாகிகள் தாங்களாக ஒதுங்கிக்கொள்ளலாம் எனவும் ராமதாஸ் கடுகடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற வடக்கு மண்டல செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் இதனை தெரிவித்துள்ளார். இன்னும் பன்மடங்கு பாமகவினர் கட்சிப்பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டாலும் சரி, தனித்து போட்டியிட்டாலும் சரி 80 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என ராமதாஸ் விரும்புகிறார். அதற்கேற்றார்போல் திட்டம் வகுத்து அதனை அன்புமணி மூலம் செயல்படுத்தவும் தொடங்கிவிட்டார். தம்பிகள் படை, தங்கைகள் படை, உள்ளிட்ட புதிய பிரிவுகளை பாமகவில் ஏற்படுத்தி அதன் மூலம் கிளை வரை பாமகவை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறார் அன்புமணி ராமதாஸ். ஆனாலும், அதில் ஏதோ சுணக்கம் இருக்கத்தான் செய்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 32 ஆண்டுகள் ஆகியும் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை, எதிர்க்கட்சியாக கூட ஆகமுடியவில்லை என நிர்வாகிகளிடம் வருத்தப்பட்டுள்ளார் ராமதாஸ். இதனால் வரும் தேர்தலில் நிச்சயம் பாமகவின் தயவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழலை உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக ஏற்கனவே போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் இப்போது பாமகவும் போர்க்கொடி உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications