அம்பேத்கர் சிலையின் பெயரால் வன்முறை: திமுக- வி. சிறுத்தைகள் மீது ராமதாஸ் காட்டம்
சென்னை: அம்பேத்கர் சிலையின் பெயரால் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபடுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் கடந்த சில நாட்களாக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் மிகவும் கவலையளிக்கின்றன. பதற்றத்தை தூண்டி, அசாதாரண சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சில சக்திகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்த பாட்டாளி மக்கள் கட்வி தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பா.ம.க. வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக வன்முறையில் தூண்டி விடுகின்றன. பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்தும் வன்முறை கும்பல்கள், அதனால் ஏற்படும் பதற்றத்தை பயன்படுத்தி பா.ம.க. கொடிக் கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, விளம்பர பதாகைகளை சேதப்படுத்துவது, பிரச்சாரத்திற்கு செல்லும் பா.ம.க. வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களை தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன.
அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கர் அரியூர், ஆரணி தொகுதியிலுள்ள குண்ணத்தூர், புதுச்சேரி தொகுதிக்குட்பட்ட அபிஷேகப்பாக்கம் போன்ற இடங்களில் அம்பேத்கர் சிலைகள் திட்டமிட்டே சேதப்படுத்தப்பட்டு, பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது வீண்பழி சுமத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட குடிமன்னூரில் பா.ம.க. வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வேலுவின் வாகனம் மீதும், விழுப்புரம் மாவட்டம் மிட்டாமண்டகப்பட்டு என்ற இடத்தில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் இராவணன் மீதும், நாகை மாவட்டம் பழையாறு என்ற இடத்தில் மயிலாடுதுறை பா.ம.க. வேட்பாளர் அகோரம் மீதும் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மிட்டாமண்டகப்பட்டு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் உட்பட பல காவலர்கள் படுகாயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தை ஒரு கும்பல் இடித்து சேதப்படுத்தியது. இது குறித்து பா.ம.க. அளித்த புகாரின் அடிப்படையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பழி வாங்குவதாக நினைத்து தங்களின் குடிசைகளுக்கு தாங்களே தீயிட்டுக்கொண்ட சிலர், இதற்கு பா.ம.க. தான் காரணம் என்று பொய்யான புகார் அளித்ததன் பேரில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அப்பாவிகள் சிலரை காவல்துறை கைது செய்துள்ளது.
அண்மையில் சென்னையில் நடந்த எங்கள் பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க.வைச் சேர்ந்த இளைஞர்கள் மீது இனி எந்த வழக்கும் பதிவாகாத அளவுக்கு அமைதியான, நாகரிகமான, வளர்ச்சி அரசியலை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இதுபோன்ற செயல்களில் பா.ம.க.வினர் ஒரு போதும் ஈடுபடமாட்டார்கள். உண்மையில் தி.மு.க. தூண்டுதலின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திவிட்டு, பா.ம.க.வினர் மீது வீண்பழியை சுமத்தி வருகின்றனர். இது குறித்த வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரிகளே இந்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு ஆதரவாக பெரும் எழுச்சி ஏற்பட்டிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் வன்முறையை தூண்டும் செயல்களில் தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும் ஈடுபட்டிருக்கின்றனர்.
பா.ம.க. வேட்பாளர்கள் ஜனநாயக முறையில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாத இவர்கள், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்கு சேகரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இன்னொருபுறம் வன்முறையை தூண்டி பா.ம.க.வின் செல்வாக்கை சீர்குலைக்க முயல்கின்றனர். இவ்வாறு செய்வது தி.மு.க.வுக்கு புதிதல்ல. 1998ஆம் ஆண்டு தேர்தலின்போதே திண்டிவனத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த சிலர் மூலம் செருப்பு மாலை அணிவித்து அரசியல் லாபம் தேடவும், அதற்கான பழியை பா.ம.க. மீது சுமத்தவும் தி.மு.க. மாவட்ட செயலாளர் முயற்சி செய்தார். அப்போதே, அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நான் உண்ணாவிரதம் மேற்கொண்டேன். பின்னர் நடந்த விசாரணையில் அம்பேத்கர் சிலை களங்கப்படுத்தப்பட்டதன் பின்னணியில் தி.மு.க.வினர் இருந்த சதித் திட்டம் அம்பலமானது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. தேர்தலுக்கான தேதி கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்போதே பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக இந்த அளவுக்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றால், தேர்தல் நெருங்க, நெருங்க இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. எனவே, அம்பேத்கர் சிலைகளை மையமாக வைத்து அரங்கேற்றப்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்தவும், மக்களவைத் தேர்தல்களை அமைதியாக நடத்தவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.
அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்படுவதை தடுப்பதற்கான காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க பா.ம.க. தயாராக உள்ளது. அம்பேத்கர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பதால் தான் தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் அவரது சிலைகளை நான் திறந்து வைத்திருக்கிறேன். எந்த தலைவரும் செய்யாத அளவுக்கு ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை நான் திறந்து வைத்துள்ளேன். எனது தைலாபுரம் தோட்ட வளாகத்திலும் அவரது சிலையை திறந்து பாதுகாத்து வருகிறேன். தமிழகத்தில் எந்த ஓரிடத்திலும் அம்பேத்கரின் சிலையோ அல்லது மற்ற தலைவர்களின் சிலைகளோ அவமதிக்கப்படக்கூடாது என்பது தான் எனது விருப்பம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications