எந்த ஆட்சியாக இருந்தாலும் கொலை, கொள்ளை நடப்பது என்பது இயல்புதான்...இப்படி சொல்வது முதல்வர் எடப்பாடி!
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை போலீஸார் நெருங்கிவிட்டதால் அவர்கள் விரைவில் பிடிபடுவர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை: எந்த ஆட்சியாக இருந்தாலும் கொலை, கொள்ளை நடப்பதும் இயல்புதான் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பற்ற வகையில் பதில் அளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்களை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ராமஜெயம் கொலை வழக்கு குறித்து திமுகவினர் கேள்வி எழுப்பினர். அப்போது முதல்வர் வியக்கத்தக்க பதிலை அளித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர். வழக்கில் பல்வேறு தடயங்கள், ஆதாரங்களை கைப்பற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் கொலை, கொள்ளை நடப்பது என்பது இயல்புதான். குற்றங்களுக்கு எப்படி தீர்வு காண்கிறோம் என்பதில்தான் அரசின் செயல் இருக்கிறது. கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டவர்களை போலீஸ் உடனடியாக கண்டுபிடித்து கைது செய்கிறது.
திமுக ஆட்சியில் எவ்வளவு கொலை, கொள்ளை நடந்தது என புள்ளி விவரத்துடன் என்னால் சொல்ல முடியும். சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குறறங்களில் எண்ணிக்கை குறைவு என்றார் முதல்வர் பழனிச்சாமி.
தமிழக முன்னாள் அமைச்சரும், திமுகவின் திருச்சி மாவட்ட செயலாளருமான கே. என். நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் 28-இல் நடைப்பயிற்சிக்கு சென்ற போது கடத்திக் கொல்லப்பட்டார்.
இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாலும், காவல்துறை விரைந்து கொலையாளியை கண்டறியாததாலும் சிபிசிஐடிக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications