For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடும் சர்ச்சையில் தமிழக தலைமை தகவல் ஆணையாளர் நியமனம்!

By R Mani
Google Oneindia Tamil News

தமிழ் நாட்டின் தலைமை தகவல் ஆணையாளராக, ஒய்வு பெற்ற மாநில டிஜிபி யும், ஜெயலலிதாவின் ஆலோசகராக பணியாற்றி வந்தவருமான கே. ராமானுஜத்தை நியமித்தது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த பல மாதங்களாகவே தமிழ் நாடு தகவல் ஆணையாளர் பதவி காலியாக இருந்து வந்தது. திடீரென்று, ரகசியமாக எந்தவோர் முறையான முன்னறிவிப்புமின்றி ராமானுஜத்தை தலைமை தகவல் ஆணையராகவும், தட்ஷிணாமூர்த்தி என்ற ஓய்வு பெற்ற மாஜிஸ்டிரேட்டையும், முருகன் என்ற வழக்கறிஞரையும் தகவல் ஆணையர்களாக தமிழக அரசு அறிவித்து விட்டது. அவர்களுக்கு தமிழக ஆளுநர் கே ரோசய்யா ஞாயிற்றுக் கிழமை பதவி பிரமாணமும் செய்து விட்டார். இவர்கள் இந்த பதவிகளுக்கு நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற எந்த முறையான செய்திக் குறிப்பும் பத்திரிகைகளுக்கு வழங்கப்படாதது கவனிக்கத் தக்கது.

Ramanujam's controversial appointment as Chief information commissioner

இந்த நியமனங்கள் தமிழ் நாட்டில் உள்ள தகவல் உரிமைப் போராளிகளிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் மற்றோர் விஷயம், இந்த நியமனங்களைச் செய்வதற்கு முன் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்பது. தகவல் ஆணையர்களையும், தலைமை தகவல் ஆணையரையும் தேர்ந்தெடுப்பதற்காக நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு அனுப்பபட்ட கடிதம், கூட்டம் நடந்த தினம்தான் அவரது கட்சியினருக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. ஆக இந்த நியமனமே முறையாக செல்லுபடியாகுமா என்பதுதான் கேள்வி. ஏனெனில் யாராவது இதனை எதிர்த்து நீதி மன்றத்துக்குப் போனால் இந்த நியமனங்கள் சிக்கலாகலாம் ஆனால் அதனை விட முக்கியமானது நியமிக்கப் பட்டிருக்கும் நபர்கள் இந்த உயர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களா என்பதுதான்!

ராமானுஜம் 1978 ம் ஆண்டு பேட்ச் ஜபிஎஸ் அதிகாரி. தனது பதவிக்காலத்தின் 90 சதவிகிதத்தை உளவுத்துறையிலேயே கழித்தவர். அவரை 2011 ல் முதலைமைச்சரான போது ஜெயலலிதா சட்டம், ஒழுங்கு மற்றும் உளவுத்துறைக்கு என்று இரண்டு பிரிவுகளுக்குமான டிஜிபி யாக நியமித்தார். இது மிகவும் அபத்தமான, ஆரோக்கியமற்ற நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. காரணம், சட்டம், ஒழுங்கு பிரிவுக்குத் தேவையான பின் புலத் தகவல்களைத் தரும், அதன் செயற்பாடுகளை பின்னால் இருந்து இயக்கி வரும் பிரிவுதான் உளவுத்துறை என்பது. சட்டம், ஒழுங்கு அதிகாரிகள் செய்யத் தவறுவதைக் கண்டித்து, அவர்களை முடுக்கி விடும் பிரிவு இது. இந்த உளவுத்துறையில் சாதாரண காவலரைப் பார்த்தால் கூட சட்டம் ஒழுங்கில் உள்ள ஒரு இன்ஸ்பெக்டர் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்.

அப்படியிருக்கையில் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் ஒரே டிஜிபி யை நியமித்தது பலரது புருவங்களையும் உயர்த்தியது. இதில் முக்கியமான விஷயம், தனது வாழ்நாள் முழுவதையும் உளவுத்துறையில் பணியாற்றிய ஒரு அதிகாரி, ரகசியங்களை காப்பதிலேயே ஆயுளைக் கழித்தவர். இவரைப் போய் வெளிப்படைத் தன்மைக்காகவே, சட்டரீதியாக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்புக்கு தலைவராக நியமிப்பதன் உள்நோக்கம் மிகுந்த அபாயம் நிறைந்ததாகவே ஆர்டிஐ ஆர்வலர்களால் பார்க்கப் படுகிறது. ‘ஏற்கனவே ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள் தகவல் ஆணையர்களாக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் தகவல் வேண்டி வருபவர்களிடம் நடந்து கொள்ளுவது மிரட்டல் தொனியிலேயே இருக்கும். இதில் உளவுத்துறை டிஜிபி யை நியமித்திருப்பது மேலும் பல மடங்கு ஆபத்து நிறைந்தது ஆகும்' என்று கூறுகிறார் ஆர்டிஐ ஆர்வலரும், சட்டப் பஞ்சாய்த்து இயக்கத்தின் பொதுச் செயலாளருமான செந்தில் ஆறுமுகம்.

தகவல்கள் கொடுப்பதை விட எவ்வாறு தகவல்களை மறைக்கலாம் என்பதிலேயே இந்த அதிகாரிகளின் நோக்கம் இருக்கும் என்பதே தகவல் பெறும் உரிமைக்காக போராடுபவர்களின் கருத்தாக உள்ளது. மும்பையைச் சேர்ந்த ஷைலேஷ் காந்தி என்ற ஆர்டிஐ ஆர்வலர் மத்திய தகவல் ஆணையத்தின் உறுப்பினராக 2008 ம் ஆண்டு நியமிக்கப் பட்டார். இவர் ராமானுஜத்தின் நியமனத்தை இவ்வாறு வருணிக்கிறார். ‘இது அபத்தமானது, கேலிக்கூத்தானது. உளவுத்துறையில் தனது வாழ்நாளை கழித்த ஒருவர், ரகசியமான மனிதராகவே இருப்பார். இப்படிப்பட்ட ஒரு மனிதர், வெளிப்படைத் தன்மை அடிப்படை ஆதாரமாக விளங்கக் கூடிய ஒரு அமைப்பின் தலைவராக எப்படிப் பணியாற்ற முடியும்? இது போன்ற அமைப்புகளுக்கு நியமனங்களைச் செய்யும் முன்பாக, ஆர்டிஐ க்கு அத்தகையோர் அளித்த பங்களிப்பை அரசாங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது,' என்கிறார் ஷைலேஷ் காந்தி.

மக்களுக்கு எல்லா தகவல்களையும் அளித்து, லஞ்ச, லாண்யமற்ற நிர்வாகத்தைக் கொடுப்பதற்காக உருவாக்கப் பட்ட ஒரு அமைப்புக்கு செய்யப்பட்ட நியமனமே, மிகுந்த ரகசியமானதாக, அவலம் நிறைந்ததாகப் பார்க்கப் படுகிறது.

‘எல்லாவற்றுக்கும் இந்த அரசு விளம்பரம் செய்கிறது. அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், அம்மா உணவகம் என்று எல்லாவற்றுக்கும் பக்கம், பக்கமாக விளம்பரங்களை அள்ளிக் கொடுக்கும் அரசு, தகவல் ஆணையர்கள் நியமனத்தில் மட்டும் ரகசியம் காத்தது ஏன்? வெளிப்படைத் தன்மையை உருவாக்க ஏற்படுத்தப் பட்ட ஒரு அமைப்பிலேயே வெளிப்படைத் தன்மை குழி தோண்டிப் புதைக்கப் படுகிறதென்றால், இதை விட வெட்கக் கேடு வேறு என்ற இருக்க முடியும்?' என்று வினவுகிறார் சட்ட பஞ்சாய்த்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோ.

இது ஏதோ ஜெயலலிதா ஆட்சியில தான் வேண்டிய அதிகாரிகளை அவர்களது ஒய்வுக்குப் பிறகு அரசுகள் தகவல் ஆணையர்களாக நியமிக்கின்றன என்பது தவறு. 2010ல் தலைமைச் செயலர் ஸ்ரீபதி ஒய்வு பெற்ற உடன் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப் பட்டார். எந்த அரசும் தனக்கு விசுவாசமான அதிகாரியை அவரது ஓய்வுக்குப் பின்னர், அரசுக்கு பாதுகாப்பாக, ரசகியங்களைக் காப்பதில் பக்கபலமாக இருப்பார் என்று கருதி முக்கிய பதவிகளில் நியமிக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஸ்ரீபதி விவகாரத்தில் குறைந்த பட்சம் அவரது நியமனம் வெளிப்படையாக அறிவிக்கப் பட்டது. தற்போது மிகவும் ரகசியமாக நடந்து முடிந்திருப்பது, இனி வருங் காலங்களில் தமிழக தகவல் ஆணையம் எப்படி செயற்படப் போகிறது என்பதற்குக் கட்டியங் கூறிக் கொண்டிருக்கிறது.

இதில் மற்றோர் முக்கியமான விஷயம் ராமானுஜத்தின் டிஜிபி நியமனத்தை மத்திய அரசு அங்கீகரிக்காததும், இந் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப் பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் இருப்பதும்தான்.

‘ராமானுஜம் நேர்மையான அதிகாரிதான். சந்தேகமில்லை. ஆனால் அவரது டிஜிபி நியமனமே இன்று உச்ச நீதிமன்றத்தில் கேள்விக் குறியாகியிருக்கிறது. அவரும் ஒய்வு பெற்று விட்டார். உச்சநீதிமன்றத்தின் பிரகாஷ் சிங் தீர்ப்பின்படி டிஜிபி என்பவர் குறைந்தது இரண்டாண்டுகளாவது பதவியில் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது. ஆனால் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெற்ற வயதான 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்த ஒருவரை டிஜிபி யாக நியமித்து விட்டு, அதற்குப் பிறகு அவருக்கு இரண்டாண்டுகள் பதவி உத்திரவாதம் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தவறாக பயன்படுத்தும் காரியமாகும். இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் இரண்டாண்டுகளை கழித்த ஒருவர் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் மற்றுமோர் பதவிக்கு நியமிக்கப் பட்டிருக்கிறார்' என்கிறார் பெயர் கூற விரும்பாத காவல்துறை உயரிதிகாரி ஒருவர்.

மேலும் பிரகாஷ் சிங் தீர்ப்பால் ராமானுஜம் இரண்டாண்டுகள் டிஜிபி யாக பணியாற்றியது பல அதிகாரிகளின் பதவி உயர்வையும் பாதித்து விட்டதாக சொல்லப் படுகிறது. ‘உச்ச நீதிமன்றத்தின் பிரகாஷ் சிங் தீர்ப்பு மிகவும் பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதென்பதற்கு ராமானுஜம் விவகாரம் ஒரு முக்கிய உதாரணமாகும். ராமானுஜம் டிஜிபி யாக இரண்டாண்டுகள் பதவியில் இருந்ததில் 14 உயரதிகாரிகள் - இதில் டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி அடங்குவர் - பதவி உயர்வுகள் பாதிக்கப் பட்டு விட்டன. இதனால் இந்த 14 அதிகாரிகளின் ஓய்வூதியங்கள் கூட பாதிக்கப்பட்டு விட்டன' என்று என்னிடம் கூறினார், திமுக ஆட்சியில் செல்வாக்குடன் இருந்து தற்போது ஓரங் கட்டப்பட்டு விட்ட ஏடிஜிபி ஒருவர்.

அடிப்படையில், நேர்மையான, யார் ஆட்சியில் இருந்தாலும், தனது ராஜவிசுவாசத்தை அவர்களுக்கு காட்டுவதிலும், தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஒரு அதிகாரிதான் ராமானுஜம். தமிழக காவல்துறையின் உளவுத்துறை வரலாற்றில் ராமானுஜத்துக்கு எப்போதும் தனியானதோர் இடமுண்டுதான். ‘ராமானுஜம் உளவுத்துறை வேலைக்கு என்றே பிறந்தவர். அப்பழுக்கற்றவர். பல காவல்துறை அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். கோடிக்கணக்கான ரூபாய் ரகசிய நிதியிலிருந்து அவர் நினைத்திருந்தால் எவ்வளவு வேண்டுமானால் எடுத்துச் செலவு செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு பைசை கூட எடுத்து செலவு செய்தது கிடையாது. ஆனால் கடந்த இரண்டாண்டுகளில் அவரது செயற்பாடுகளைப் பார்த்தால் ஏமாற்றமும், ஆயாசமும் தான் மிஞ்சுகிறது' என்று என்னிடம் கூறினார் உளவுத்துறையில் ராமானுஜத்திடம் சில காலம் பணியாற்றி, தற்போது ஓய்வு பெற்றிருக்கும் ஒருவர்.

தலைமை தகவல் ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கும் ராமானுஜத்தின் ஜாதகம் தற்போது அவரது புதிய பதவிக்கு கிஞ்சித்தும் பொருந்தாதது. ‘திட்டமிட்டே ஆட்சியாளர்கள் இதுபோன்றவர்களை தகவல் ஆணையத்துக்கு நியமிப்பது ஆணையத்தை ஊத்தி மூடும் செயலாகும். அதைத்தான் தற்போதய தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது' என்கிறார் சிவ இளங்கோ.

தமிழக தகவல் உரிமை ஆர்வலர்கள் ராமானுஜம் மற்றும் இருவரின் நியமனத்தை எதிர்த்து விரைவில் ஆர்பாட்டங்களை நடத்தவிருப்பதாகவும் சிவ இளங்கோ கூறுகிறார். இந்த நியமனங்களை எதிர்த்து நீதிமன்றங்களுக்குப் போகவும் சிலர் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

-ஆர்.மணி

English summary
Columnist R Mani says that the recent appointment of Ramanujam as chief information commissioner of Tamil Nadu is become controversial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X