கலாம் இறுதிச் சடங்கு: பாதுகாப்புக்காக ராமநாதபுரம்- ராமேஸ்வரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
ராமேஸ்வரம்: மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பூவுடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ள நிலையில் ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் வரையிலான சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் வைக்கப்பட உள்ள மண்டபத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் வரையில் பொதுமக்களும், 5000க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதாலும், அவருடைய உடல் ராணுவ மரியாதையுடன் வருகின்ற பொழுது எந்தவித விபத்துக்களும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதாலும் இந்த வழித்தடத்தில் கனரக வாகனங்களான பேருந்து, டிராக்டர், லாரி போன்றவை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கார், பைக் போன்ற சிறிய வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், கலாமின் உடல் ராணுவ வாகனத்தில் ஊர்வலம் வருகின்ற போது அந்த போக்குவரத்தும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் கலாம் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த பல்வேறு ஊர்களில் இருந்தும் குவிந்துள்ள மக்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications