சுவிட்ச் போர்டை உடைத்து ராம்குமார் தற்கொலை முயற்சி... ரெடியாகிவிட்டது எப்.ஐ.ஆர்
சென்னை: சுவிட்ச் போர்டை உடைத்து அதில் இருந்த மின்கம்பியை இழுத்து வாயால் கடித்து ராம்குமார் தற்கொலை கொண்டதாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மின்கம்பியை வாயால் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளதால் இன்னும் பெற்றோரிடம் ராம்குமாரின் உடல் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் நேற்று ராம்குமார் மரணம் குறித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. ராம்குமார் தற்கொலை குறித்து ஜெய்லர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. புழல் சிறையில் டிஸ்பென்சரி இருக்கும் பகுதியில் உள்ள சிறை அறையில்தான் ஜுலை 4ம் தேதி முதல் ராம்குமார் வைக்கப்பட்டிருந்தார். அவர் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். அப்போது வார்டன் பேச்சிமுத்து சிறைக் கதவை திறந்துவிட்டார். அறையில் இருந்து வெளியே வந்து குடி நீர் பானை இருக்கும் இடத்திற்கு சென்ற ராம்குமார் டக்கென்று அருகில் இருந்த சுவிட்ச் போர்டு பாக்ஸை பலமாக உடைத்து அதில் இருந்த மின் கம்பி இழுத்து தனது பற்களால் கடித்தார். அதனை பார்த்த பேச்சுமுத்து ஓடிவந்து லத்தியால் அடித்து அவரை காப்பாற்ற முயன்றார். ராம்குமார் அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டார். உடனே, வார்டன் மின்சார இணைப்பை துண்டித்துவிட்டு சிறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒயர்லெஸ்சில் தகவல் கொடுத்தார் என்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் பணியில் இருந்த சிறை மருத்துவர் ராம்குமாருக்கு முதலுதவி செய்துள்ளார். ராம்குமாரின் நிலை மிக மோசமான நிலையில் இருக்கவே அங்கிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராம்குமார் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர் என்று எப்.ஐ.ஆர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.