ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கின் விசாரணை தொடங்கியது
சென்னை: ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணை தொடங்கியுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது தந்தை பரமசிவம் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் உடன் இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த 2 நீதிபதிகளுக்கிடையே தனியார் மருத்துவரை நியமிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு வந்ததால் விசாரணை 3வது நீதிபதி கிருபாகரனிடம் வந்தது. இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் தொடங்கியுள்ள விசாரணையில் வழக்கறிஞர் சங்கர சுப்பு வாதிட்டு வருகிறார்.
அதில், ராம்குமாரின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும், 220 வாட்ஸ் மின்சாரம் பாய்ந்து ஒருவர் இறக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் சார்ட் சர்க்யூட் ஆனால் மின்சாரம் தானாகவே துண்டிக்கப்பட்டு விடும் என்றும் சிறைக் காவலர்கள் ராம்குமாரை அடித்துக் கொன்று இருக்கலாம் என்றும் வாதிட்டார்.
உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர வேறு எதுவும் இல்லை என்றும் ஏற்கனவே தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ராம்குமார் தனது தந்தையிடம் சொல்லி இருந்ததையும் வழக்கறிஞர் சங்கர சுப்பு தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications