யாருடனும் பேசுவதில்லை.. யாரையும் பார்க்க விரும்புவதும் இல்லை.. மகா அமைதியில் ராம்குமார்
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சிறையில் யாருடனும் பேச விரும்புவதில்லையாம். அவரிடம் பேச கைதிகள் பலர் விரும்பினாலும் கூட அவர் பேசுவதில்லையாம். அதேபோல யாரையும் அவர் பார்க்க விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளாராம்.
சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது அவர் தனது தொண்டையை பிளேடால் கிழித்துத் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதற்காக நெல்லையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் அவரை சென்னைக்குக் கொண்டு வந்தனர் போலீஸார்.
சென்னை கொண்டு வரப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் குணமடைந்ததாக டாக்டர்கள் அறிவித்ததும் புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

அமைதியாக - தனிமையாக
புழல் சிறையில் மருத்துவமனை செல் எனப்படும் பகுதியில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார். மற்ற கைதிகள் அவரை நெருங்கி விடாத அளவுக்கு பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார் ராம்குமார்.

3 போலீஸார் பாதுகாப்பு
ராம்குமாருக்கு 3 போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் அவர்கள் ராம்குமாரைக் கண்காணித்து வருகின்றனர். ஷிப்ட் முறையில் இந்த மூவரும் பணியாற்றுகின்றனர்.

கைதிகள் ஆர்வம்
ராம்குமார் சிறைக்கு வந்தது முதலே அவருடன் பேச அங்குள்ள கைதிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் யாராலும் ராம்குமாரை நெருங்க முடியவில்லையாம். சிறைக் காவலர்கள் அனுமதிக்க மறுக்கிறார்களாம்.

ராம்குமாருக்கு ஆர்வம் இல்லை
அதேசமயம், யாருடனும் பேசக் கூடாது என்று ராம்குமாருக்கு காவலர்கள் கட்டளை இட்டுள்ளதாக தெரிகிறது. ராம்குமாரும் கூட யாருடனும் பேசும் ஆர்வத்தில் இல்லையாம். எனவே போலீஸாருக்கும், ராம்குமாரால் பெரிய அளவில் நெருக்கடி ஏதும் இல்லை.

யாரையும் பார்க்க விரும்பவில்லை
அதேபோல யாரையும் பார்க்கவும் இதுவரை ராம்குமார் விருப்பம் தெரிவிக்கவில்லையாம். பெற்றோர், தங்கைகள் என யாரையுமே பார்க்க அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.

முழு ஒத்துழைப்பு
காவலர்கள் பேசினால், சுவாதி கொலை குறித்து கேட்டால் மட்டும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறாராம் ராம்குமார். கேட்ட கேள்விக்கு சரியாக பதிலளிக்கிறாராம். எனவே அவரிடம் விசாரணை நடத்துவது மிக மிக சுலபமாக இருந்ததாக போலீஸ் தரப்பில் பாராட்டும் வகையில் கூறுகிறார்கள்.

அமைதி
சிறை அறையில் பெரும்பாலும் அமைதியாக அமர்ந்திருக்கிறாராம் ராம்குமார். அனாவசியமாக பேசுவதில்லையாம். கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிடுகிறாராம். எந்தக் கோரிக்கையும் வைப்பதில்லையாம். தன்னுடன் பேசும் காவலர்களிடம் தான் செய்த செயலுக்காக வருந்துவதாக மட்டும் அவ்வப்போது கூறுகிறாராம்.












Click it and Unblock the Notifications