நாமக்கல்: பேராசிரியையை பலாத்காரம் செய்ததாக பி.இ. மாணவர் மீது வழக்கு
நாமக்கல்: கல்லூரி பேராசிரியையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பி.இ. மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டியை அடுத்து உள்ள கைக்காட்டியை சேர்ந்தவர் சாந்தி(27). எம்.ஏ. படித்துள்ள அவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.
கடந்த 2008ம் ஆண்டு சாந்திக்கும் நாமக்கல் மாவட்டம், வடுகப்பட்டியை சேர்ந்த சுப்ரமணிக்கும் திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டனர். இதையடுத்து சாந்தி தனது பெற்றோருடன் வசிக்கிறார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜிட்டாம்பட்டியை சேர்ந்த கண்ணன்(21) என்பவர் சாந்தியின் வீட்டிற்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
கண்ணனுக்கும் சாந்திக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. சாந்திக்கு விவாகரத்து கிடைத்தவுடன் அவரை திருமணம் செய்து கொள்வதாக கண்ணன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அவர் சாந்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கர்ப்பமான சாந்தி நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே விவாகரத்து கிடைத்த நிலையில் சாந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணனிடம் தெரிவித்ததற்கு அவர் மறுத்துள்ளார்.
இதையடுத்து சாந்தி கண்ணன் மற்றும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டிய அவரது தாய் மங்கம்மாள் மீது போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.