ஒரே எலித் தொல்லை.. ஏசி போச்சு.. தூங்க முடியலை.. பாண்டியன் ரயிலில் பயணிகள் கதறல்!
திண்டுக்கல்: பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் எலித் தொல்லை தாங்க முடியவில்லை. எலிகள் கடித்ததில் ஏசி வயர்கள் துண்டிக்கப்பட்டதால் குளிர்சாதன பெட்டிகள் வேலை செய்யாமல் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
என்னதான் உலகின் மிகப் பெரிய ரயில்வே என்ற பெயர் இருந்தாலும் இந்திய ரயில்வே, பயணிகளுக்கு அளிக்கும் வசதிகள் பல சமயங்களில் எரிச்சலையே ஏற்படுத்துகின்றன. அதில் ஒன்று ரயில்களில் எலித் தொல்லை.
நேற்று இரவு இந்த எலித் தொல்லையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி ரயில்வே அதிகாரிகளுடன் சண்டை போடும் நிலை ஏற்பட்டது.

மதுரை டூ சென்னை
மதுரையிலிருந்து நேற்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்குக் கிளம்பி வந்து கொண்டிருந்தது. கொடை ரோடு அருகே ரயில் வந்தபோது ஏசி பெட்டி ஒன்றில் திடீரென புகை வந்தது. அலறி அடித்த பயணிகள் சத்தம் போட்டனர். இதையடுத்து ரயில் கொடைரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

ஏசி இல்லாமல் அவதி
டெக்னீஷியன்கள் வந்து பார்த்து விட்டு ஏசி மெஷின் ரிப்பேராகி விட்டதாக தெரிவித்தனர். ஆனால் ரிப்பேர் பார்த்தால்தான் பயணிப்போம் என்று பயணிகள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி அதிகாரிகள் ரயிலில் ஏற்றி அனுப்பினர்.

திண்டுக்கல்லில் பெரும் போராட்டம்
இப்படியாக ரயிலை திண்டுக்கல் வரை நகர்த்தி விட்டனர். அதற்கு மேலும் புழுக்கத்தில் இருக்கப் பிடிக்காமல் பொறுக்காமல் பயணிகள் ரயில் நிலைய பிளாட்பார்மில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர். புழுக்கத்துடன் பயணிக்க முடியாது என்று கூறி கொந்தளித்தனர்.

குதித்து ஓடிய எலிகள்
இதையடுத்து ஏசி மெஷினை ரிப்பேர் பார்க்க ஊழியர்கள் விரைந்தனர். ஏசி மெஷினைக் கழற்றியபோது அதிலிருந்து ஏகப்பட்ட எலிகள் குதித்து ஓடின. அவை வயரைக் கடித்ததால்தான் ஏசி மெஷின் ரிப்பேராகியுள்ளது. இதையடுத்து பழுது சரி பார்க்கப்பட்ட பின்னர் ஏசி மெஷின்கள் ஓடத் தொடங்கின. அதன் பின்னர் சுமார் 2 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் ரயில் கிளம்பியது.

முடியலைங்க
பயணிகள் இதுகுறித்துக் கூறுகையில் பாண்டியன் ரயிலில் எப்போதுமே எலித்தொல்லை அதிகம். எந்தப் பொருளையும் வைக்க முடியவில்லை. நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. பலமுறை இதுகுறித்து புகார்கள் கூறியும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று குமுறினர்.












Click it and Unblock the Notifications