ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக "முதல் விக்கெட்"... வட சென்னை மா.செ. ராயபுரம் மனோ ராஜினாமா!
சென்னை: தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வடசென்னை மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராயபுரம் மனோ. தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ராயபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார் ஆர்.மனோ என்கிற மனோகர். இவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் தீவிர ஆதரவாளர் ஆவார்
சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. ராயபுரத்தில் படுதோல்வியடைந்தார் மனோ.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்தார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தலைவர் பதவியில் இளங்கோவன் தொடர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்று வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ நேற்று தெரிவித்தார். ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுமாறு இளங்கோவனிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இளங்கோவனின் ராஜினாமாவை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டதாகவும், புதிய தலைவர் யார் என்பதை வெளிநாடு சென்றுள்ள ராகுல்காந்தி நாடு திரும்பிய பின்னர் அறிவிப்பார் என்றும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வடசென்னை மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராயபுரம் மனோ. தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.