காவிரி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை- கமல் கருத்துக்கு தலைவர்கள் கடும் கண்டனம்
கமல் தனது கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை : காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இன்று பெங்களூருவில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை காவிரி பிரச்னை தொடர்பாக சந்தித்தார். அந்த சந்திப்பில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில், காவிரி பிரச்னை குறித்து பேசி நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். கமலின் இந்தக் கருத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாயை மூடுங்கள் கமல்
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், காவிரி விவகாரத்தை எதற்காக தற்போது கமல்ஹாசன் கையில் எடுக்கிறார். அவர் குமாரசாமியை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன ? காவிரி விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு அவர் துரோகம் செய்துவிட்டார். நடிகர் கமல் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார்.

தவறான பாதையில் காவிரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் காவிரி பிரச்னையில், மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தேவையில்லாமல் கமல் ஏன் அது குறித்து தவறான கருத்தை பரப்பி வருகிறார். காவிரி விவகாரம் மீண்டும் தவறான பாதைக்குச் செல்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கை
அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் பேசுகையில், கமல் காவிரி விவகாரம் தொடர்பாக குமாரசாமியை சந்திக்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே கோரிக்கை வைத்து இருந்தேன். இந்நிலையில், கமலின் கருத்து தமிழக விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கை போல் உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் கமல்ஹாசன் அவமதித்துவிட்டார். இது தமிழ் மக்களுக்கு கமல் செய்த மிகப்பெரிய துரோகம் என்று தெரிவித்துள்ளார்.

பச்சைத் துரோகம்
காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் பெ.மணியரசன் கூறுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில பிரதிநிதி போல கமல் கருத்து தெரிவித்துள்ளார். இவரை கர்நாடக முதல்வரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று யார் அனுப்பி வைத்தார்கள். கமல் செய்திருப்பது பச்சைத்துரோகம். இந்த செயலுக்கு கமல் உடனடியாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications