குளச்சல் துறைமுக திட்டத்துக்கு இடையூறு வந்தால் அமைச்சர் பதவி ராஜினாமா.. பொன்.ராதா போர்க்கொடி
நாகர்கோவில்: குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைவதற்கு இடையூறு ஏற்பட்டால் மத்திய இணை அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வேன் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைய வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவு. மத்தியில் ஆளும் பாஜக அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.23 ஆயிரம் கோடி பணம் ஒதுக்கீடு செய்துள்ளது.

பிரதமர் மோடி இத்திட்டத்தை நிறைவேற்ற ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் காங்கிரசாரும், தி.மு.க.வினரும் மீனவர்களை அச்சுறுத்தி இத்திட்டத்தை தடுக்கப்பார்க்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில் வெற்றி பெற்ற தி.மு.க. - காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களும் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இணைந்து செயலாற்ற வேண்டும். அதை விடுத்து மக்களை திசைதிருப்பி திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுக்கும் நிலை நீடித்தால், அதற்கு என் பதவி இடையூறாக இருந்தால் நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து போராட்டத்தில் குதிப்பேன். பாஜக தொண்டர்கள் ஆதரவுடன் இத்திட்டத்தை நிறைவேற்ற போராடுவேன்.
காங்கிரஸ் கட்சி அழிந்து வரும் நிலையில் உள்ளது. அதனை வளர்த்தெடுக்கும் பணியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈடுபடட்டும். அதை விடுத்து பிரதமர் மோடியை விமர்சிக்க அவருக்கும், காங்கிரசுக்கும் எந்த தகுதியும் இல்லை.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கு காங்கிரசே காரணமாகும். மத்திய அரசு, மாநில அரசுடன் சுமூகமாக, இணக்கமாக செயல்படவே விரும்புகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதன் மூலம் தமிழகத்திற்கு நல்ல பலனும், வளர்ச்சி திட்டங்களும் கிடைக்கும். அது நம்மாநிலத்திற்கு பயனுள்ளதாக அமையும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications