காரில் இருந்து தூக்கி வீசப்பட்டாரா? கை, கால் துண்டானது எப்படி? - ரேகா சிந்துவின் பெற்றோர் சந்தேகம்
எனது மகளின் ஒரு கை, கால் துண்டாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது மரணத்தில் மர்மம் உள்ளது என்று நடிகை ரேகா சிந்துவின் பெற்றோர் புகார் கூறியுள்ளார்.
வேலூர்: எனது மகள் வந்த கார் பாதுகாப்பு நிறைந்தது. விபத்து ஏற்பட்டால் பலூன் வெளியே வந்து உயிரை காக்கும். அதுபோல் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. எனது மகளின் ஒரு கை, கால் துண்டாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று நடிகை ரேகா சிந்துவின் பெற்றோர் புகார் கூறியுள்ளார்.
கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பெங்களூரை சேர்ந்த ரேகா சிந்து(22). சென்னைஸ் அமிர்தா விளம்பர படத்திலும் நடித்துள்ளார். அவர் பெங்களூரில் இருந்து காரில் சென்னைக்கு வந்துள்ளார்.
கார் விபத்து
வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தத்தில் கார் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரேகா சிந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் சிந்து உள்பட 6 பேர் இருந்துள்ளனர். காயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகை ரேகா சிந்து மரணம்
விபத்தில் பலியான நடிகை ரேகா சிந்து உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவரது தந்தை நேரில் வந்து ரேகா சிந்து உடலை பார்த்து கதறி அழுதார்.
கை கால் துண்டானது ஏன்?
ரேகா சிந்துவின் ஒரு கை, கால் துண்டாகி இருந்தது. இதனைக் கண்டு திடுக்கிட்டார். எனது மகள் வந்த காரில் பாதுகாப்பு வசதிகள் உள்ளது. விபத்து ஏற்பட்டால் பலூன் வெளியே வந்து உயிரை காக்கும். அதுபோல் எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
மரணத்தில் சந்தேகம்
எனது மகளின் ஒரு கை, கால் துண்டாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கார் கதவு தானாக திறந்து வெளியே வந்து விழுந்தாரா? என்றும் கேட்டுள்ளார்.
விபத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தாலும், அவருடன் வந்த மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பி உள்ளனர். எனது மகள் சாவில் பலத்த சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்வேன் என தெரிவித்தார்
அநாதையாக போட்டது ஏன்?
விபத்து பற்றி எங்களுக்கு தெரிவிக்கவில்லை. காரில் சென்றவர்களில் என் மகள் மட்டுமே இறந்து போனதாக கூறுவதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ரேகாவின் தாயார் கூறியுள்ளார். என் மகள் உடலை எங்களிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் திருட்டுத்தனமாக மருத்துவமனையில் போட்டு விட்டு ஓடிவிட்டார்களே? அதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் எனது மகளின் மரணத்தை விசாரிக்க வேண்டும் என்றும் ரேகாவின் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார்.