'டாஸ்மாக்' குடிமகன்களுக்கோர் கெட்ட செய்தி! 'கிடுகிடு' உயர்வை நோக்கி சரக்கு விலை!!
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை விரைவில் கடுமையாக உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் மதுபான கடைகளை கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அரசே ஏற்று நடத்தி வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் பல முறை விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது.
முதலில் குவார்ட்டர் பாட்டில் ரூ.57 என்ற விலை இருந்தால் அதன் மீதி பணத்தை தராமல் ரூ.60 போகவே ஊழியர்கள் தருவதாக எழுந்த குற்றச்சாட்டால் இதன் விலை 5 அல்லது 10ல் முடியும் வகையில் உயர்த்தப்பட்டது.
கொள்முதல் விலை உயரவில்லை
அதன் பின்னர் பலமுறை விலை உயர்த்தப்பட்டாலும், மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொள்முதல் உயர்த்தப்படவில்லை.
ஸ்பிரிட் விலை உயர்வு
இந்நிலையில், மத்திய அரசு ஸ்ரிபிரிட் விலையை உயர்த்தியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழக அரசு கொள்முதல் விலையை உயர்த்த மதுபான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
விரைவில் கொள்முதல் விலை உயர்வு
இந்நிலையில் மதுபானங்களின் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ. 2 முதல் ரூ.4 வரை உயர்த்தலாம் என டாஸ்மாக் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அப்படி விலை உயர்த்தப்பட்டால் இந்த கூடுதல் சுமையை குடிமகன்கள் தலையிலேயே திணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கொள்முதல் விலையை உயர்த்திய பின்னர் விற்பனை விலை அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஒரு பாட்டிலுக்கு ரூ10 உயர்வு
விலையை ரவுண்டாக வைக்க வேண்டும் என்பதால் பாட்டிலுக்கு ரூ.10 வரை உயரும் வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.