ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமனம்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை மேற்கொண்ட அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து அதிமுக 2-ஆக பிரிந்தது. இதைத் தொடர்ந்து கட்சியின் நலன் கருதியும், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காகவும் அதிமுக இரு அணிகளும் ஒன்றிணைய முடிவு செய்தன. எனினும் ஜெயலலிதா மரணத்தில் தமிழக மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த சந்தேகத்தை போக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பினர் நிபந்தனை விதித்தனர். அதன்படி கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. எனினும் 40 நாள்கள் ஆகியும் விசாரணை கமிஷன் அமைக்காதது குறித்து எதிர்க்கட்சியினரும் , தினகரன் அணியினரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து இன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் எத்தனை நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தகவல்கள் அரசாணையில் இல்லை.