முடிவெடுங்கண்ணே, நாங்க ஏற்கிறோம்.. அழகிரி முன்பு முழங்கிய ரித்தீஷ்
மதுரை: மதுரையில் நடந்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய அத்தனை பேருமே நாடி நரம்பு புடைக்க ஆவேசமாக பேசியுள்ளனர். முடிவெடுக்குமாறும், அதை அமல்படுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் நடிகர் ஜே.கே.ரித்தீஷ் முழங்கினார்.
மதுரையில் தயா மஹாலில் நடந்த கூட்டத்தின்போது அழகிரியே கூட உருக்கமாகத்தான் பேசினார்.
தான் தலைவர்களை சந்தித்தது குறித்து அவர் குறிப்பிடுகையில், தம்பி இது உன் வீடு, எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என்று நடிகர் ரஜினி கூறியதாக குறிப்பிட்டார்.
அதேபோல ராஜ்நாத் சிங் ஆதரவு கேட்டார், எஸ்.திருநாவுக்கரசரும் ஆதரவு கேட்டார். வைகோ என்னிடம் பழைய நட்புடன் பேசினார் என்றார் உருக்கமாக.
கூட்டத்தில் பேசிய மற்ற ஆதரவாளர்கள் பேச்சும் கூட நெகிழ்ச்சியாகவே இருந்தது. அதிலிருந்து சில...
நெல்லை மாலைராஜா
நெல்லை மாவட்ட செயலர் பாலியல் சர்ச்சையில் சிக்கினார். அதற்கு நான் காரணம் என, கட்சியை விட்டு வெளியேற்றினர். ஆனால், ஒரு பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த, அவர் மீது நடவடிக்கை இல்லை. கருணாநிதி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை; அதை நாம் காப்பாற்ற வேண்டும்.
தேனி சண்முகம்
மதிமுக உருவானபோது, அக்கட்சிக்கு மாறிய பொன்.முத்துராமலிங்கம், தற்போது வேட்பாளர். ஆனால், பல ஆண்டுகளாககட்சிக்கு உழைத்தவர்களுக்கு, 'சீட்' இல்லை.
விருதுநகர் சின்னராஜ்
சாத்தூர் ராமச்சந்திரனை, அழகிரி தான் கட்சிக்குள் கொண்டு வந்தார். ஆனால், இப்போது அவர் இஷ்டத்திற்கு செயல்படுகிறார்; கட்சிக்கு பிடித்த சனியன் அவர். அழகிரி மீண்டும் கட்சிக்குள் வந்துவிட்டால், நான் ஓடிவிடுவேன் என, அவரே கூறி வருகிறார். விருதுநகர் வேட்பாளர் யார்? என்றே தெரியவில்லை. நாம் தான் உண்மையான தி.மு.க.,
மதுரை இசக்கிமுத்து
அழகிரிக்கு ஆதரவாக எழுந்துள்ள இந்த எழுச்சியை பார்த்தாவது, கட்சி அவரை மீண்டும் அழைக்க வேண்டும். இக்கூட்டம், கட்சிக்காக உழைக்க காத்திருக்கிறது; இழந்து விடாதீர்கள்.
மதுரை மன்னன்
திமுக ,வில் இருந்து வைகோ பிரிந்தபோது, உயிரை கொடுப்போம்; கழகத்தை காப்போம் என்று முழங்கினோம். இப்போது, கழகத்தை காப்போம்; தலைவரை காப்போம் என்று முழங்குவோம்.
நாளைய திமுக நீங்கள்தான்.. ரித்தீஷ்
நடிகர் ரித்தீஷ் பேசுகையில், இந்த கூட்டத்தில் பங்கேற்ற நீங்கள் தான் நாளைய, திமுக,வில், ஒன்றியம், மாவட்டம், அமைச்சர்கள் எல்லாமே. இது நமது இயக்கம். நம்மை கட்சியில் இருந்து வெளியேற்ற யாருக்கும் தகுதி இல்லை. நமது உயிர், உடல், ஆன்மாவை கட்சிக்காக அர்ப்பணிக்க வேண்டும். பொதுக் குழுவில் கருணாநிதி கூறினால், தொண்டர்கள் கேட்பார்கள். அதுபோல், இக்கூட்டத்தில் நீங்கள் எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்போம்.தி.மு.க. என்றார்.
ஆவேசத்தையெல்லாம்
ஆதரவாளர்களின் ஆவேசத்தையெல்லாம் பொறுமையாக கேட்ட அழகிரி நமது உணர்வுகளையெல்லாம் இனிமேல் போஸ்டர்களில் காட்ட வேண்டாம். அதுதான் நமக்குப் பிரச்சினையே என்று கூறி ஆதரவாளர்களின் உணர்வுகளை அடக்கி கூட்டத்தை முடித்தார்.