சென்னை மக்களுக்கு உதவ குழுவை அனுப்பிய ரியாத் தமிழ் சங்கம்
ரியாத்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த 12 ஆண்டுகளாக 7 ஆயிரத்து 500 முகநூல் உறுப்பினர்களையும், 1,500 மின்னஞ்சல் உறுப்பினர்களையும் உள்ளடக்கி சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் செயல்பட்டு வருகின்றது.
சாதி, மத பேதமின்றி தமிழால் இணைந்து சவுதி அரேபியாவின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு கலை நிகழ்ச்சிகள், சமூக சேவைகள், கல்விக்கூடங்கள், எழுத்துக்கூடங்கள், பயிற்சிபட்டறைகள் போன்றவைகளை நடத்தி வருகிறது. சவுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை தொலைக்காட்சியில் பார்த்த ரியாத் வாழ் தமிழர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தை விட்டும் எத்தனையோ கஷ்டங்களுக்கிடையே திரைகடலோடி திரவியம் தேடவந்த இம்மண்ணில் தன் சகோதர சகோதரிகளுக்கு ஒரு துயர் என்று அறிந்தவுடன் அவர்களால் இயன்ற தொகையை ரியாத் தமிழ்ச் சங்கத்திடம் கொடுத்தனர். அந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதற்காக திரு. ஜமால்சேட் அவர்கள் தலைமையில் ஒரு குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் 25 தன்னார்வலர்களுடன் சென்னையில் வியாசர்பாடி, புளியந்தோப்பு, பள்ளிக்கரணை, காரனோடை, தாம்பரம் பெரியார்நகர், சோழாவரம், பெரம்பூர், மேட்டுப்பாளையம் போன்ற இடங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி தேவையான போர்வை, பாய், சேலை, லுங்கி, அரிசி, பெண்களுக்கான நாப்கின்ஸ் போன்ற அத்தியாவசிய தேவைகளையும், மற்றும் சில இடங்களில் சென்று அவர்களின் அப்போதைய தேவையை அறிந்து இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார்கள்.
இது தவிர்த்து மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் துப்புரவு பணியையும் செய்து வருவதோடு சென்னை மற்றும் கடலூரில் மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
தன் சகோதர, சகோதரிகளின் துயர்துடைக்க தங்களால் ஒரு சிறிய அளவிலாவது உதவ முடிந்ததே என்ற மகிழ்ச்சியில் பெருமிதமடைந்து நிற்கின்றார்கள் ரியாத் வாழ் தமிழர்கள்.