ஆர்கே.நகர் இடைத்தேர்தல் ஓராண்டுக்குள் நடத்தப்படும் தேர்தல் ஆணையம் தகவல்!
சென்னை ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் ஓராண்டுக்குள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஆர்கே நகர் தொகுதிக்கு ஓராண்டுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் மத்திய அரசின் ஆலோசனைப்படி நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவால் சென்னை ஆர்கே நகர் சட்டசபை தொகுதி காலியானது. இதையடுத்து அந்த தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் இரவு பகலாக ஈடுபட்டு வந்தன. அப்போது வாக்களர்களுக்கு தினகரன் தரப்பு பணம் கொடுப்பதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சசிகளும் புகார் அளித்தன.
ரத்து செய்த தேர்தல் ஆணையம்
இந்நிலையில்வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில் டிடிவி.தினகரன் கோஷ்டி வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
விரைவில் தேர்தல் - எதிர்பார்ப்பு
சட்டசபை தொகுதி காலியான அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தேல் நடத்தப்பட வேண்டும் என்பதால் ஜூன் மாதத்துக்குள் ஆர்கே.நகருக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஓராண்டு ஆகுமாம்
ஆனால் ஓராண்டுக்குள் ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதுவும் மத்திய அரசின் ஆலோசனைப்படிதான் தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெபாசிட் தொகையை பெறலாம்
மேலும் வேட்பாளர்கள் 15 நாட்களுக்குள் தாங்கள் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணப்பித்து வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.